Sunday, December 19, 2004

வெங்கடெஷ் - தன்னம்பிக்கை, உழைப்பு, தியாகம் - இறுதி வரை!

இது வெங்கடெஷ் என்ற அசாதாரண வாலிபரைப் பற்றிய ஒரு மிகச் சிறிய கதை! ஏனெனில், ஒரு கால் நூற்றாண்டே அவர் இவ்வுலகில் வாழ்ந்தார்! அதற்குள் அவர் வாழ்ந்த வாழ்க்கை, பலருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்தது தான் அதன் அற்புதமே! அவரைச் சீரழித்த ஒரு கொடிய நோயை எதிர்த்து போராடியபடி, பல வருடங்கள் தேசிய அளவில் செஸ் விளையாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெங்கடெஷ் தனது பத்தாவது வயதில், Duchenne Muscular Dystrophy-யால் (தசைகளை மெல்ல மெல்ல செயலிழக்கச் செய்யும் ஒரு கொடிய நோய்) பாதிக்கப்பட்டார். அந்த நோய்க்கு இன்று வரை குணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்நோய், பாதிக்கப்பட்டவரின் உடலில் பரவி மூளையை இறுதியாகத் தாக்கும்போது, மரணம் சம்பவிக்கிறது.

வெங்கடெஷ் தனது தன்னம்பிக்கையாலும் அயராத உழைப்பாலும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து வணிகவியல் பட்டதாரி ஆனதோடு, தேசிய அளவில் செஸ் விளையாடியும், பள்ளி மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அளித்தும் வந்தார். ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார். இத்தனையும், ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே! நோய் முற்றிய நிலையில், அவரது கழுத்துக்குக் கீழ் முழுதும் செயலிழந்து விட்டது. மருத்தவமனையில் இருந்த அவர், தனது வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் ஒரு மகத்தான தியாகம் செய்ய முன் வந்தார்.


நோய் அவரது மூளையைத் தாக்குவதற்கு முன்னமே, அவரது உள்உறுப்புகள் தேவைப்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில், அவற்றை மனமுவந்து தானம் செய்ய விழைந்தார். ஒரு வகையில், தன்னை கருணைக் கொலை செய்யும்படி கேட்டுக் கொண்டார்!! தனது சாவின் மூலம் பலருக்கு வாழ்வு தர எண்ணிய அந்த தியாக உள்ளத்தின் இறுதி விருப்பம் சட்டத்தின் ஒப்புதல் இல்லாததால், நிறைவேறாமல் போனது! இதற்காக, அவரது தாயார் வெங்கடெஷின் மனுவை உயர்/உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்றார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று!

குணம் கண்டுபிடிக்கப்படாத ஒரு பெருநோயால், மிகுந்த வலியுடன் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அல்லது மருத்துவ இயந்திரங்கள் உதவியுடன் உயிர் தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் மனமுவந்து, சுயவிருப்பத்தின் பேரில், அவரது உள்உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தால், அதை செயல்படுத்த நமது நாட்டின் சட்டங்கள் இடம் தருவதில்லை. நமது நாட்டின் பல மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உள்உறுப்புகளுக்கான மாற்று அறுவை சிகிச்சை வேண்டி பல நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், உறுப்பு தானம் குறித்த சட்டம் திருத்தப்பட வேண்டுமா / கருணைக்கொலை அனுமதிக்கப்படலாமா என்ற கேள்விகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகின்றன.

Saturday, December 18, 2004

பல்லவியும் சரணமும் - 12

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. குளிர்காலத்தில் தளிர் பூங்கொடி கொஞ்சிப் பேசியே அன்பைப் பாராட்டுதோ, என் கண்ணன் ...
2. வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம் கேளாத வேணுகானம் கிளிப்பேச்சில்...
3. ஊமைக்கு வேறேது பாஷை உள்ளத்தில் ஏதேதோ ஆசை...
4. உடம்பு என்பது உண்மையில் என்ன, கனவுகள் வாங்கும் பை தானே ...
5. அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும் எந்த சுவருக்கும் கேட்கின்ற செவியிருக்கும் ...
6. சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும் சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்...
7. நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளி கொள்ள சுகம் மெள்ள மெள்ளவே புரியும் ...
8. தீராத ஊடலா, தேன் சிந்தும் கூடலா? என் அன்புக் காதலா...
9. கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம், கட்டி முடிந்ததடா, அதில் கட்டில் அமைந்ததடா ...
10. விழியில் ஏன் கோபமோ, விரகமோ, தாபமோ, ஸ்ரீதேவியே என் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

சரத்குமார் ரஜினியை தாக்கிப் பேச்சு!

குங்குமம் பத்திரிகையின் சமீபத்திய பதிவில், திருவாளர் சரத்குமார் ஒரு பேட்டிக்காக திருவாய் மலர்ந்திருக்கிறார். அதில், சில முத்துக்களை உதிர்த்தும் உள்ளார்.

MGR-ஐத் தவிர வேறு யாரும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு திரையுலகில் தகுதி உடையவர் கிடையாது என்கிறார். தமிழ்நாடே ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று என்றோ ஒப்புக்கொண்ட பின் இவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று யாரும் அழவும் இல்லை, அவசியமும் இல்லை! ரஜினி தனது மகள் திருமணத்திற்கு அவரை முறையாக(!) அழைக்கவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில் தான் இவ்வாறு கூறியிருக்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இதற்கு நேர்மாறாக, நடிகர்கள் ஒருவரை ஒருவர் தங்கள் படங்களில் தாக்காமல், ஒற்றுமையாக இருக்க வேண்டியதை வலியுறுத்துகிறார்! தமாஷ் தான்!

அடுத்து, ரஜினி மேல் விசாரணைக் கமிஷன் வைக்கலாம் என்கிறார். ஏனெனில், முதல்வருக்கு திரையுலகம் எடுத்த பாராட்டு விழாவில், ரஜினி தனக்கு வீரப்பனைப் பற்றி, மற்றவரை விட அதிகம் தெரியும் என்றாராம்! அவற்றை வீரப்பன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னமே போலீசுக்கு சொல்லவில்லையாம்! வீரப்பனின் குணநலன்களை(கொடூரம், வஞ்சகம், தந்திரம் போன்றவை) தான் நன்கு உணர்ந்திருந்ததாகப் பொருள் பொதிந்த ரஜினியின் கூற்றை சரத் திரித்துப் பார்க்கிறார். என்ன ஒரு கேலிக்கூத்து?

அடுத்து, தமிழக முதல்வர் திருட்டு விசிடியை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள், ஒரு முதல்வர் ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமை என்றும், அதற்காக பாராட்டு விழா எடுத்தது தேவையற்றது என தான் கருதுவதாகவும், அதனாலேயே அவ்விழாவை தான் புறக்கணித்ததாகவும் சரத் கூறியுள்ளார். இவர் தி.மு.க வை சார்ந்த ஒரு M.P. அதனால் தான் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது ஊர் உலகத்திற்கே தெரிந்த ஒரு சங்கதி! கலைஞர் முதல்வராக இருந்து, திரையுலகம் இப்படி ஒரு பாராட்டு விழா எடுத்தால், சரத் அதில் கலந்து கொள்ளாமல் இருப்பாரா என்று யாராவது கேட்டுச் சொன்னால் பரவாயில்லை!!!

அப்படியொன்றும், சத்யராஜ், கார்த்திக் போல சரத் குணச்சித்திர நடிப்பில், பரிமளித்தவரும் அல்லர். KS ரவிக்குமாரின் திரைப்படங்கள் தவிர்த்து, மற்ற படங்களில் ஒரே மாதிரியான(stereo-type) வேடங்களில் அவர் நடிப்பதைப் பார்த்து பார்த்து அலுத்து விட்டது. சரத் பாராளுமன்ற உறுப்பினர் ஆனதிலிருந்து எத்தனை முறை பாராளுமன்றக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறார் என்பதையும், அவர் தமிழ்நாட்டுக்காக, குறிப்பாக அவரது தொகுதியின் மேம்பாட்டுக்காக என்ன செய்துள்ளார் என்பதையும் அனைவரும் அறிவர்! இருந்தும், இம்மாதிரி பேட்டிகளில் பிறரைத் தாக்கிப் பேசுவது, அவரது வாடிக்கையாகி விட்டது மிகவும் வேடிக்கையான ஒரு விஷயம் தான்!!!

Tuesday, December 14, 2004

MS சுப்புலஷ்மி - அஞ்சலி

மதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி --- 1916-2004

உலகமே அவருக்கு அஞ்சலி செலுத்தி முடித்து விட்ட வேளையில், எனக்கு அவரைப் பற்றி என் வலைப்பதிவில் சில விஷயங்களை பதிய வேண்டும் என்று தோன்றியது. இந்தப் பதிவின் இறுதியில், என் நண்பர் திரு.தேசிகனின் MS-உடனான ஒரு சிறு சந்திப்பை அவரே சொல்ல அதை வெளியிட்டிருக்கிறேன்.

எப்பேர்ப்பட்ட இசைப்பெரும்பொக்கிஷம் அவர்? அவரது தெய்வீகக் குரல் வாயிலாகத் தான், நான் வெங்கடேச சுப்ரபாதமும், விஷ்ணு ஸகஸ்ரநாமமும் பிழையறச் சொல்ல கற்றுக் கொண்டேன்! அவரது அன்னமாச்சார்யா கீர்த்தனைகளை, மனதில் குழப்பமோ வேதனையோ நிலவிய தருணங்களில், எத்தனை முறை கேட்டு அமைதி அடைந்திருக்கிறேன்! முக்கியமாக, 'பாவமுலோன, பாக்யமு நந்துலு' மற்றும் 'நானாட்டி பதுகு நாடகமு, கானக கன்னதி கைவல்யமு' ஆகியவை.

உள்ளத்தை உருக்கும், பக்தி ரஸம் சொட்டும் அவரது மீராபஜன், ஸ்ரீரங்கபுர விஹாரா, பஜகோவிந்தம் ஆகியவற்றை பலமுறை கேட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன். 'காற்றினிலே வரும் கீதம்' பாடலில் அவர் தேன்குரலில் தவழ்ந்து வரும் இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட ஓரிசையில் (transcendence) லயிக்காத உயிரும் உண்டோ ? குறையொன்றும் இல்லாதவனைப் பற்றி அவர் பாடிய 'குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா, குறை ஒன்றும் இல்லை கண்ணா" வைக் கேட்டு நெஞ்சம் நெகிழாதாரும் உண்டோ ?

அவருடைய படல்களில் இருந்த சுருதி/வாக்சுத்தமும் சௌக்யமும் அனுபவிப்பதற்கு, கர்னாடக சங்கீதம் பயின்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவரது நெஞ்சை உருக்கும் இசையின் வீச்சை, அவர் குரல் பட்டிதொட்டிகளிலெல்லாம் (கோயில் முதல் டீக்கடை வரை) ஒலித்ததன் மூலம் உணரலாம். பலதரப்பட்ட மக்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரல் வாயிலாக மயக்கி தன் கட்டுக்குள் வைத்திருந்தார் அந்த இசை சகாப்தம்! மகாத்மா காந்தி விரும்பிய 'வைஷ்ணவ ஜனதோ' பஜன் MS-இன் குரல் வாயிலாக பிரசத்தி பெற்றது! தன்னுடைய இசையால் மொழி வழித் தடைகளை உடைத்தெறிந்தவர் அவர்! திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் விண்ணப்பத்திற்கு இணங்கி, MS தனது 63-வது வயதில், தெலுங்கு கற்று, அதன் தொடர்ச்சியாக, பாலாஜி பஞ்சரத்னமாலா, அன்னமாச்சார்யா சங்கீர்த்தனைகளும் கூடிய ஒரு உன்னத இசைமாலையை தொடுத்து வேங்கடேசப் பெருமானுக்கு சூட்டினார்! பக்தியாலும், உழைப்பாலும் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு MS ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.

மகாத்மாவே ஒரு முறை கூறியது போல், MS பாடும்போது, அவர் கடவுளுக்கு அருகில் செல்வதோடு மட்டுமல்லாமல், கேட்பவரையும் அதே பரவச நிலைக்குக் கூட்டிச் சென்று விடுவார்! அது அவருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று! பக்தியும் பாவமும் மேலோங்கும் அவரது மீராபஜன் இதற்கு ஒரு சிறந்த சான்று. பண்டித நேரு ஒரு முறை அவர் பாடலில் லயித்து "Who am I, a mere Prime minister, in front of the Queen of Music?" என்று கூறியிருக்கிறார். இசை வல்லுனர்கள் பலரும் கூட தேவகானம் பாடிய தேவதையாகவே அவரை கண்டார்கள். செம்மங்குடியிடம் அவருக்கிருந்த குருபக்தி அபாரமானது என்று பலரும் போற்றுவர். செம்மங்குடியே, MS-இன் குரல் சுருதியுடன் குழைந்து கலக்கும் விதத்தை, வெண்ணெய் நெய்யாக உருகுவதுடன் ஒப்பிட்டு அந்த சுகானுபவத்தை வர்ணிப்பது கடினம் என்று கூறியிருக்கிறார்!!!

இவற்றுக்கெல்லாம் மேலாக நான் கருதும் விஷயம், அவரது ஒப்பிலா மனிதநேயமே. எண்ணிலடங்கா நல்ல காரியங்களுக்கு அவரது இசை வித்திட்டது என்றால் அது மிகையாகாது. ஆனால், செய்த தானதருமங்கள் வெளியில் தெரியாவண்ணம் அவர் நடந்து கொண்டது தான் அவரை பலரிடமிருந்தும் தனித்து நிறுத்துகிறது. ஐ.நா. சபை வரை தன் இசையை கொண்டு சென்ற அவர், தான் ஈட்டியதில் பெரும்பங்கை பல தர்ம ஸ்தாபனங்களுக்கு வழங்கியதால், ஒரு முறை, வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை பலர் அறிந்திருக்க மாட்டார்.அவர் வாங்கிய விருதுகள் தான் எத்தனை? வாங்கிய விருதுகளுக்கே பெருமை சேர்த்தவர் அந்த இசை மாமேதை! சிலவற்றை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

1. செம்மங்ககுடியும், ராஜமாணிக்கம்பிள்ளையும் வழங்கிய 'இசைவாணி' பட்டம் - 1940
2. பத்மபூஷன் விருது - 1954
3. சங்கீத கலாநிதி விருது - 1968
4. தில்லி பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் - 1973
5. ராமோன் மக்ஸாஸே விருது - 1974
6. பத்மவிபூஷன் விருது - 1975
7. தமிழ்நாடு இசை இயல் நாடக மன்றத்தின் தனிப்பெரும்கலைஞர் விருது - 1980
8. தேச ஒற்றுமைக்கான இந்திராகாந்தி விருது - 1990
9. சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி விருது - 1997
10. அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் பாரத ரத்னா விருது - 1998

கானப்பெருங்குயில் ஒன்று படைத்தவனைக் காண இப்பூவுலகை விட்டு சென்று விட்டது. இன்னும் பல தலைமுறைகள் அவரது "கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா' வை கேட்ட வண்ணம் விடியலைத் தொடங்கும் என்பதில் ஐயமில்லை! இன்னும் பல நூற்றாண்டுகள், பல கோடி மாந்தர் MS-இன் மீராபஜனையும், 'ஹே கோவிந்தா, ஹே கோபாலா!' வையும் கேட்டு கண்ணீர் சிந்தவும், அவரது 'வைஷ்ணவ ஜனதோ'வை கேட்டு மனஅமைதி பெறவும் செய்வர் என்பதிலும் ஐயமில்லை!
என்றென்றும் அன்புடன்

பாலா




தேசிக அனுபவம்

ஆறு வருடங்களுக்கு முன் நான் புதுமணமானவனாக இருந்த சமயத்தில் நடந்த நிகழ்ச்சி அது. எனக்கும் கர்னாடக சங்கீதத்திற்கும் பரிச்சயம் சற்று குறைவு தான். ஆனால், என் மனைவி கர்னாடக சங்கீதத்தை அவரது குரு திருமதி ராதா விஸ்வநாதனிடம் (MS அவர்களின் மகள்) 18 வருடங்கள் முறைப்படி கற்றவர்.ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் என் மனைவியை இசை பயிலக் கூட்டிச் செல்வது என் முக்கிய அலுவல்களில் ஒன்று! ஒரு இனிய மதியத்தில் கிளாஸ் முடியும் தறுவாயில், MS தன் மகளின் வீட்டிற்குள் நுழைந்தார்! முதன்முதலாக அவரை நேரில் பார்த்தேன்! அந்த இசை மாமேதையின் முன் உட்கார மனமில்லாமல், நான் எழுந்து நின்று விட்டேன். பிறகு, தரையில் அமர எத்தனித்த என்னை MS தன் அருகில் இருந்த இருக்கையில் அமருமாறு கூறி விட்டு என் மனைவியை பாடுமாறு பணித்தார்.


என் மனைவி மிகுந்த தைரியத்துடன், MS ஏற்கனவே அற்புதமாக பாடியிருந்த சூர்தாஸின் ஒரு பஜன்-ஐ பாடிக் காட்டினார்! அதை முழுவதும் கேட்டு ரசித்துப் பாராட்டினார் MS! அந்த இசை சகாப்தத்தின் அருகில் அமர்ந்திருந்த அக்கணங்களில், என் மனதில் தோன்றிய உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பது கடினம்! அவரிடம் விடைபெறுவதற்கு முன், அவர் பாதம் தொட்டு வணங்கி ஆசிகள் பெற்றுக் கொண்டோ ம். அப்பேர்பட்டவர், எங்களை தன் இல்லத்திற்கு ஒரு முறை வரும்படியும் கேட்டுக் கொண்டார்.


ஆறு ஆண்டுகளுக்குப் பின், நேற்று காலை, அவர் காலமாகி விட்ட சேதி அறிந்து மனம் கலங்கி அழுதேன்.


--- Desikan

Saturday, December 11, 2004

பல்லவியும் சரணமும் - 11

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் ...
2. ஆசை தந்த கனவுகள் எல்லாம், என்னால் தான் நனவுகளாகும்...
3. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி...
4. மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா? ...
5. கல்லாகி போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன் கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன் ...
6. என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை...
7. ஆற்று மணல் மேடெங்கும் பூ வரைந்த கோலங்கள் தேவமுல்லையே காணவில்லையே ...
8. தாவி வரும் கையசைவில் விளைந்தது தான் பாவமோ, தெய்வமகள் வாய் மலர்ந்து மொழிவது தான் ராகமோ...
9. கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே? ...
10. மாதங்கள் பலவாக உருவானதோ, மகராணி முகம் இன்னும் மெருகேருதோ ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, December 06, 2004

சிறு வயது சிந்தனைகள் - பகுதி 5

எதையும் திருந்தச் செய்தல் அவசியம் என்ற வாழ்க்கைப் பாடத்தை என் தாய்வழிப் பாட்டனாரிடம் (RBS என்றழைக்கப்பட்ட R.B.சடகோபாச்சரியார்) தான் கற்றுக் கொண்டேன்! அவர் ஒரு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். ஆங்கில இலக்கணத்தில் விற்பன்னர். பள்ளிக் காலத்தில் நான் பாடங்களை உரக்கக் கூறி மனப்பாடம் செய்வது வழக்கம். ஆங்கிலப்பாடம் சத்தமாகப் படிக்கையில், நான் ஏதாவது சின்னத்தவறு செய்தால், அவர் வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அத்தவறை உடனே சுட்டிக் காட்டி திருத்துவார்!

தாத்தாவின் retired வாழ்க்கை அபாரமானது. காலை சரியாக 4 மணிக்கு விழித்தெழுவார். மார்கழி மாதமானாலும், குளிப்பதற்கு சுடு தண்ணீர் உபயோகிக்க மாட்டார்! காலையில் காபி/தேநீர் அருந்த மாட்டார்! அதிகாலை பூஜை முடித்து, பார்த்தஸாரதி கோயில் சென்றால், வீடு திரும்புவதற்கு கிட்டத்தட்ட 11 மணியாகி விடும். சுமார் இரண்டு மணி நேரம் 'The Hindu' படித்து விட்டுத் தான், உணவைத் தொடுவார். அக்கால வழக்கப்படி, தனக்குப் பசித்தாலும், அவர் உணவருந்தியே பின்னரே, பாட்டி சாப்பிடுவார். மதியம் உறங்கும் பழக்கமற்றவராதலால், மறுபடியும் 'The Hindu'வைத் தொடர்வார். வீட்டின் கணக்கு வழக்குகளை கவனிப்பார். சில ஏழை மாணவர்களுக்கு இலவசமாக படிப்பு சொல்லித் தருவார்.

சரியாக மாலை 5 மணிக்கு சற்று பெரிய டம்ளரில் டிகிரி காபி அருந்தி விட்டு வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பிரபந்தப் பாராயணத்தைத் தொடங்குவார். இரவு ஏழரை மணிக்கு குறைந்த அளவு சாப்பாட்டிற்குப் பின், சரியாக 8 மணிக்கு ரேழியின் ஓரமாக படுக்கையிட்டு உறங்கச் சென்று விடுவார்! இதே Routine-ஐ, 12 ஆண்டுகள் அவர் கடைபிடித்ததை நான் பார்த்து வியந்திருக்கிறேன்! என் கல்வியார்வம், பக்தி, ஏழைகளுக்கு இரங்குதல், ஆங்கிலத்தில் ஓரளவு ஆளுமை போன்றவைகளுக்கு வித்திட்டவர் அவரே.

அவருக்கு ஏதாவது ஒரு காரணத்தினால் கோபம் ஏற்பட்டால், அதை அவர் வெளிப்படுத்தும் விதத்தில் நகைச்சுவை (SATIRE) நிறைந்திருக்கும்!!! அவர் ஒரு மாவடு (வடு மாங்காய்) பிரியர். பாட்டியும் ஒவ்வொரு வெயில் காலத்திலும், அவருக்காகவே பெரிய ஜாடி நிறைய மாவடு ஊறுகாய் தயாரித்து வைப்பது ஒரு வருடாந்திர சடங்கு போன்றே நடந்து வந்தது! ஒரு பத்து நாட்களாவது ஊறிய பின்னரே, மாவடு சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால், தாத்தாவோ மாவடு விஷயத்தில் பொறுமையை கடைபிடிக்க மாட்டார்.கடுமையான 'ஆசாரர்' ஆன அவரிடம், உண்ணும் இலையிலிருக்கும் ஒரு பதார்த்தத்தை எடுத்து கடித்து விட்டு மறுபடியும் இலையில் வைக்கும் பழக்கம் அறவே இல்லாததால், முதல் நாள் தயாரித்த மாவடுவை, அது சற்று கடினமாக இருக்கும்போது, கட்டை விரலாலேயே விண்டு உடைக்க முயன்று இயலாதபோது,'என் கட்டை விரலை உடைப்பதற்காகவே இதை செய்திருக்கிறாள்' என்று கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத கோபத்தில், அவருக்காகவே மாவடு தயாரித்த பாட்டியை அன்பாகத் திட்டுவார்!!! (எவ்வளவு பெரிய வாக்கியம் எழுதி விட்டேன்!)

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் அக்கா, குதூகலத்துடன் இருக்கிறாள் என்றால், அவள் நடையில் ஓட்டமும் துள்ளலும் தானாக ஏற்பட்டு விடும்! அம்மாதிரியான ஒரு சமயத்தில், சற்று பாவாடையை விசிறிக் கொண்டு அவள் செல்கையில், தாத்தா மீது மோதி விட்டாள்! தாத்தாவுக்குக் கோபம் மூக்கு நுனியில், அக்காவுக்கோ பயம்! ஆனால், தாத்தா கோபத்தை வெளிக்காட்டாமல், நிதானமாக அவளைப் பார்த்து, "கல்யாணம் ஆனபிறகு, இதே மாதிரி ஓட்டமும் நடையுமாக நீ இருப்பாயேயானால், உனக்கு வாய்க்கும் மாமியார் உன்னை மிகவும் மெச்சுவாள்!?" என்று ஒரு போடு போட்டார்! அக்கா உடனே சிரித்து விட, தாத்தாவுக்கும் கோபம் பறந்து போய் விட்டது!

பிறிதொரு சமயத்தில், எனக்கும் என் தம்பிக்குமிடையே நடந்த ஒரு சண்டையில் குறுக்கிட்டு, என்னைப் பார்த்து,"நான் ஒன்று சொல்கிறேன், கேட்கிறாயா? சரியாக அவன் மூக்கைப் பார்த்து ஒரு குத்து விடு! அவனை மேலே அனுப்பி விட்டால், உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையல்லவா?!" என்று கூறியதன் தாக்கத்தில், நான் தம்பியுடன் சண்டை போடுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அடுத்தவர் மனமறிந்து, நாசூக்காக நடந்து கொள்ள அவர் ஒரு போதும் தவறியதில்லை, என்பேன். உதாரணமாக, பள்ளியில் பயில்கையில், நான் ஆங்கிலத் தேர்வு எழுதி விட்டு வீடு வரும் நேரம், அவர் வாசல் திண்ணையில் தான் அமர்ந்திருப்பார். ஆங்கிலத்தில் ஆர்வம் உள்ள அவருக்கு, நான் தேர்வை எவ்விதம் எழுதினேன் என்று அறிந்து கொள்ளவும், என் வினாத்தாளைக் காணவும் மிகுந்த ஆவல் மேலிட்டாலும், என்னை வாசலில் நிறுத்தி உடனடியாக ஒரு போதும் கேட்டதில்லை. நான் உணவருந்தி, சற்று ஓய்வெடுத்த பின்னரே, மெல்ல என்னிடம் வந்து, தேர்வைப் பற்றி விசாரிப்பார். வினாத்தாளையும், நான் வாய் வார்த்தையாகக் கூறும் பதில்களையும் வைத்து, அவர் கணித்துச் சொன்ன மதிப்பெண்களுக்கும், நான் தேர்வில் பெற்றதற்கும், அதிக வித்தியாசம் இருந்ததில்லை!!

எனக்கு பொறியியற் கல்லூரியில் பயில இடம் கிடைத்த தகவல் வருவதற்கு ஒரு மாதம் முன்பு அவர் இறந்து போனது என் வாழ்வில் ஒரு பெருஞ்சோகம் தான். அதை இன்று நினைத்தாலும் சற்று வேதனையாகத் தான் உள்ளது.


என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, December 04, 2004

பல்லவியும் சரணமும் - 10

இதற்கு முந்தைய 9 "பல்லவியும் சரணமும்" பதிவுகளில் கேட்கப்பட்ட 81 சரணங்களூக்கு, நீங்கள் கண்டுபிடிக்கத் தவறியவை just 5 மட்டுமே! நல்ல பாடல்களில் ஊறித் திளைத்திருக்கிறீர்கள் போலும் :-)

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. அழகி பார்த்தாலே அருவி நிமிராதோ? கண்ணாடி உனைக்கண்டு கண்கள் கூசும் ...
2. நான் அடைந்த செல்வம் கொள்ளை போனதே, அமைதியின்றியே அலைய நேர்ந்ததே...
3. இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன், பூவிலே மெத்தைகள்...
4. ஊடல் அவளது வாடிக்கை என்னைத் தந்தேன் காணிக்கை ...
5. நித்தம் நித்தம் உள்ளம் களிக்க, கற்ற வித்தை எங்கும் செழிக்க முத்து ரத்தினம் ...
6. கன்னித்தமிழ் தேவி, மைக்கண்ணன் அவள் ஆவி, நல்காதல் மலர் தூவி மாலையிட்டாள்...
7. தூக்கம் கெட்டு கெட்டு, துடிக்கும் முல்லை மொட்டு, தேக்குமர தேகம் தொட்டு ...
8. அஞ்சு விரல் பட்டால் என்ன? அஞ்சுகத்தைத் தொட்டால் என்ன? தொட்ட சுகம்...
9. உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா! நனைந்த பொழுதினில் ...
10. பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள், மாமனைப் பாரடி கண்மணி என்றாள் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, December 03, 2004

சிரித்ததற்காக ஒருவர் கைது!

இது போல் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? இங்கிலாந்தில் மேற்கூறியது குறித்த வழக்கொன்று நீதிமன்றத்துக்கு வந்தது!

ஒரு நிறைமாத கர்ப்பிணிப்பெண் பேருந்தில் பயணித்தபோது ஓர் இளைஞன் தன்னைப் பார்த்து புன்னகைப்பதைக் கண்டு, தன் நிலைமை குறித்து வெட்கமும், சற்றே அவமானமும் அடைந்தாள். அதனால், தன்னுடைய இருக்கையை விட்டு விலகி வேறிடத்தில் அமர முற்பட்டபோது, அவன் புன்னகை சிரிப்பானது! மறுபடியும், இன்னும் சற்று நகர்ந்து வேறொரு இருக்கைக்கு இடம் பெயர்ந்தாள். அவ்விளைஞனின் சிரிப்பு அப்போது அடக்க முடியாத இடிச்சிரிப்பு ஆனதால், அப்பெண் கோபமுற்று, காவலரை அழைத்து அவனை கைது செய்ய வைத்தாள்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவன் அவ்வாறு ஒரு பொது இடத்தில் நடந்து கொண்டதற்கான காரணத்தை வினவினார். இளைஞன் கூறிய பதில் கீழே:

" ஐயா, அந்த கர்ப்பிணிப்பேண் பேருந்தில் ஏறியபின் அமர்ந்த இருக்கைக்கு நேர்மேலே 'வெகு விரைவில் வருகிறார்கள், தங்கத்தூசு இரட்டையர்கள்!' என்ற விளம்பரம் காணப்பட்டது. அவள் அடுத்து 'வில்லியம்மின் குச்சி செய்த மாயம்' என்ற ஷேவிங்க் விளம்பரத்திற்குக் கீழ் அமர்ந்தபோது, எனக்கு சிரிப்பு வந்து விட்டது. மூன்றாம் முறை, அப்பெண் உட்கார்ந்த இருக்கைக்கு மேலிருந்த 'டன்லப் ரப்பர் இவ்விபத்து நிகழாமல் நிச்சயம் தடுத்திருக்கும்!' என்ற விளம்பர வாசகத்தை கண்டவுடன், தாள முடியாமல் நான் சிரித்த பெருஞ்சிரிப்பு என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது! "

அவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!!!


Sunday, November 28, 2004

பல்லவியும் சரணமும் - IX

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

'kudigaaranin uLaRaLgaL' வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர், Icarus Prakash மற்றும் சந்திரவதனா ஆகியோர் 2 பேராவது பின்னூட்டம் இட்டபிறகு தான், போட்டியில் ஆஜராகுமாறு, பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

1. உண்டால் மயக்கும் கள்ளாவது அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது ...
2. உந்தன் சங்கீத சலங்கை ஒலி இந்த ஏழைக்கு கீதாஞ்சலி ...
3. உந்தன் மீன்விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே ஆணெழில் முகம் வான்மதியென...
4. கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன் காற்றடிக்கும் நேரம் ...
5. நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே? அன்பினாலே ஒன்று சேர்ந்தோம் ...
6. புதுத்தென்றலோ பூக்களில் வசிக்கும், ஆகாய மேகங்கள் நீருற்ற வேண்டும்...
7. காதல் என்பது தேன்கூடு அதை கட்டுவது என்பது பெரும்பாடு ...
8. இளமையின் கனவுகள் கண்ணோரம் துளிர் விடும், கைகள் இடைதனில்...
9. தாங்காது கண்ணா என் தளிர்மேனி நூலினம், தூங்காத கண்கள் ...
10. படுக்கையில் பாம்பு நெளியுது தலையணை நூறு கிழியுது ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, November 27, 2004

பல்லவியும் சரணமும் - VIII

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
'kudigaaranin uLaRaLgaL' வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர், Icarus Prakash மற்றும் சந்திரவதனா ஆகியோர் 2 பேராவது பின்னூட்டம் இட்டபிறகு தான், போட்டியில் ஆஜராகுமாறு, பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் :-)) ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

1. என் வாழ்வில் நீ வந்தது விதியானால், நீ எந்தன் உயிரன்றோ ...
2. மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு, வெண்சொர்க்கமே பொய் ...
3. கடற்கரை காற்றே வழியை விடு, தேவதை வந்தாள் என்னோடு ...
4. முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே, என் காதல் சேதி போகும் பல்லாக்கிலே ...
5. மணவினைகள் யாருடனோ, மாயவனின் விதிவகைகள் ...
6. அழகான ஆசை முகம், அடங்கதா ஆசை தரும், பொன்னந்தி மாலை ...
7. நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேடையும் தேவையென்ன? சொந்தங்களே இல்லாமல் ...
8. நீ பார்த்ததால் தானடி பூ பூத்தது மார்கழி ...
9. தென்காற்றின் இன்பங்களே, தேனாடும் ரோஜாக்களே, என்னென்ன ஜாலங்களே ...
10. பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடி வைத்து, பார்த்திருந்த காலமெல்லாம் பழங்கதை ஆனதடி ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, November 23, 2004

இந்து ஒற்றுமை - சில எண்ணங்கள்

இந்தியாவின் பாரம்பரியமிக்க ஒரு இந்து ஸ்தாபனத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு இந்துக்களிடையே அதிக எதிர்ப்பு இல்லாததற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதுவும், நீதிமன்றத்தில் அரசு வக்கீல் மிகச் சாதாரணமாக ஒரு மடாதிபதியை 'undeserving criminal' என்றழைப்பதும், அவர் போலீஸ் காவலுக்கு அனுப்பப்படுவதும், சலுகைகள் மறுக்கப்பட்டு ஒரு சாதாரண குற்றவாளியைப் போல் அவர் நடத்தப்படுவதும், அவற்றுக்கு எந்த எதிர்குரலும் கேட்காததும், யாருமே எதிர்பார்க்காதது தான்!

இதற்கான பல காரணங்களில் முக்கியமானது, சங்கர மடத்தை, குறுகிய நோக்குடைய, ஒரு பார்ப்பனீயத்தின் சின்னமாகவே பலர் பார்க்கிறார்கள். இதில் உண்மையும் இருக்கிறது. இத்தனைக்கும் ஜெயேந்திரர், மற்ற மடாதிபதிகள் போல் அல்லாமல், சமூக மற்றும் மக்கள் நலத் திட்டங்களை சங்கர மடம் மூலம் செயல்படுத்தவும், தலித்துக்களுக்கு ஆதரவாக பேசவும், நடக்கவும் ஓரளவு முயன்றார் எனக் கூறலாம். இருப்பினும், இந்துக்களில் அனைத்து சாராரையும் சரிசமமாகக் கருதி, அவர்களை ஒன்றிணைத்து, இந்து மதத்தை வலுப்படுத்த மடமும், அதன் மடாதிபதிகளும் தவறி விட்டதன் விளைவே, ஜெயேந்திரர் கைதுக்குப் பின் இந்துக்களிடையே நிலவும் ஓர் ஆழ்ந்த மௌனமும், அனுதாபமின்மையும்.

இந்துக்களுக்கு எதிரானவர்கள், தமிழ்நாட்டில் இந்துக்களிடையே ஒற்றுமை குறைவு என்பதைத் மிகத் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்! இந்துக்களிடையே பிராந்தியம், மொழி, இனம், குலம் என்ற வகையில் பல வேறுபாடுகள் பல காலமாகவே (வளர்க்கப்பட்டும்!) நிலவியும் வருகிறது. இதில், மதச்சார்பற்ற (என்று கூறிக்கொள்ளும்!) அரசியல் கட்சிகள் குளிர் காய்கின்றன. இந்துக்கள் பொதுவாக ஒற்றுமையாக இருந்து செயல்படுவது, வினாயகர் ஊர்வலங்களிலும், கோயில் குடமுழுக்கு விழாக்களிலும் தான்! தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் இயல்பாக இந்துவாக இருக்கும் பலர், வெளியே தங்களை மதச்சார்பற்றவராகக் காட்டிக் கொள்வதில் அதிக ஆர்வமாக உள்ளது ஏன் என்பது விளங்கவில்லை!

இந்துக்களின் கட்சி என்றுணரப்படும் பிஜேபி-யில் கூட, கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்களில், பார்ப்பனர் அல்லாத இந்துக்களும், தலித்துக்களும் மிகக் குறைவே. இந்நிலை மாறி, அவர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்படுவது தான், இந்துக்களிடையே ஒற்றுமை தழைக்க வழி வகுக்கும். இக்கால கட்டத்தில், நம் நாட்டிற்கு மிக அவசியமானதும் கூட!!!

Saturday, November 20, 2004

வெகுண்டு

வெகுண்டு

நான் படித்ததெல்லாம் சென்னையின் ஒரு பகுதியான திருவல்லிக்கேணியின் இந்து உயர்நிலைப் பள்ளியில் தான். கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையான அப்பள்ளி அமைந்த பெரிய தெரு, பெயரளவில் தான் பெரிசு. அவ்வளவாக அகலம் இல்லாத அத்தெருவில், பல வகைக் கடைகளும், வங்கிகளும், தங்கும் விடுதிகளும் 'Big street பிள்ளையார்' கோயிலும் இருந்தன. இதனால், பெரிய தெரு எந்நேரமும் பரபரப்பாகக் காணப்படும். தெருவின் இருமருங்கிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, மீதமிருந்த தெருவின் மத்தியப் பகுதியில், மனிதர்களும், வாகனங்களும், அல்லிக்கேணி மாடுகளும் இடத்துக்காக சண்டை போட்ட வண்ணம் இருக்கும் காட்சியை, தினமும் காணலாம்.

சரி சரி, விஷயத்துக்கு வருகிறேன்! நான் அப்போது 7-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். உடன் படித்த மாணவனான .... பெயர் ஞாபகத்திற்கு வர மறுக்கிறது ... என் நல்ல நண்பன். ஆஜானுபாகு ஆக, நல்ல பால் வண்ணத்தில் இருந்த அவனுக்கு 'வெள்ளை குண்டன்' என்ற காரணப்பெயர் சூட்டப்பட்டு, நாட்போக்கில் அது மருவி, 'வெகுண்டு' என்பது நிலைத்து விட்டது. எனக்கும் பள்ளியில் புனைப்பெயர் உண்டு. அதற்கும் நான் கூற வந்த விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லாததால், அதைப்பற்றிய ப்ரஸ்தாபம் இங்கு தேவையற்றது.

வெகுண்டுவின் தந்தையார், உடுப்பியிலிருந்து சென்னை வந்த கன்னடக்காரர். அவர் தொழில் என்ன என்று இந்நேரம் நீங்களே யூகித்திருப்பீர்களே! கரெக்ட்! அவர் மேற்கூறிய பெரிய தெருவில் 'உடுப்பி' வகை உணவகம் நடத்தி வந்தார். மனிதர், பக்திமான், நேர்மையானவர், மிக நல்லவரும் கூட. இந்த அளவுக்குக் கூட அவரை நான் உயர்த்திப் பேசவில்லை என்றால், நன்றி கெட்டவனாகி விடுவேன். அவ்வுணவகத்தில், வெகுண்டுவுடன் அமர்ந்து எவ்வளவு தடவை ஓசியில் சாப்பிட்டிருக்கிறேன் தெரியுமா?!

வெகுண்டுவை படிப்பில் மக்கு என்று கூற இயலாது. 'மஹாமக்கு' என்று தான் சொல்ல வேண்டும். ஏனோ தெரியவில்லை. சரஸ்வதி தேவி தன் கடாட்சத்தை அவன் பக்கம் திருப்ப மறந்தே போனாள். அவனை 'வெகுண்டு' என்று கூப்பிடுவோமே தவிர, அவன் ஒருபோதும் வெகுண்டெழுந்தது கிடையாது! சாதுவானவன். சுருள் சுருளாக முடியும், அமைதியான முகமும், அசப்பில் பார்ப்பதற்கு 'பாச மலர்' படத்தில் வரும் சிவாஜி கணேசன் போலவே இருப்பான். அதி தீவிர சிவாஜி ரசிகனும் கூட. அந்த 'படிக்காத மேதை'யால் தான் நானும் ஒரு சிவாஜி ரசிகன் ஆனேன். வெகுண்டுவின் நடை உடை பாவனைகளில் 'சிவாஜித்தனம்' மிகுந்திருக்கும். அவனுக்கு பல சிவாஜிப் படப்பாடல்களும் வசனங்களும் அத்துப்படி!! பல சமயங்களில் சிவாஜியின் திரைப்பட வசனங்களை எனக்கு அழகாகவே பேசிக்காட்டுவான். கேட்டே ஆக வேண்டும்! இல்லையென்றால், ஓசி சாப்பாடு கிடைக்காதே!

வெகுண்டு ஒவ்வொரு சிச்சுவேஷனுக்கும் ஒரு சிவாஜி பட வசனம் அல்லது பாட்டு தயாராக வைத்திருப்பான்! மளிகைக் கடைக்காரர் அவன் அம்மாவிடம் பணம் கேட்கும்போது 'வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் தருவது பாக்கி!' என்பான். அவன் அண்ணன் தந்தையாரிடம் அவனைப் போட்டுக் கொடுத்தால் 'அண்ணன் காட்டிய வழியம்மா' என்று பாடுவான். என் அக்கா சற்று வேகமாக நடந்து சென்றால் 'ஆஹா, மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்' என்று கிண்டலடிப்பான். பக்கத்து வீட்டு அறுவைக் கிழவர் பரமபதம் பெற்றபோது 'போனால் போகட்டும் போடா' என்று விரக்தியில்லாமல் பாடினான்!!! மொத்தத்தில், வெகுண்டு இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. வெகுண்டு ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, திருவிளையாடலில் சிவாஜி ஸ்டைலாக நடப்பது போல், குளியலறை நோக்கி நடந்து செல்லும் காட்சி இன்னும் என் கண்ணிலேயே நிற்கிறது.

வெகுண்டு அரையிறுதி தேர்வில் ஆங்கிலத்தில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், அவன் தந்தையார் வெகுண்டார். அவனை என் தாத்தாவிடம் ஆங்கில இலக்கணம் கற்க அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்ற என் தாத்தாவிடம் பல வருடங்களுக்குப் பின் அகப்பட்ட ஒரே மாணவன் வெகுண்டு! அதனால், அவன் பாடு படுதிண்டாட்டம் ஆயிற்று! என் தாத்தா சாதாரணமாகவே ஒரு விஷயத்தை 2 தடவை கூறுவார். படிப்பு சம்பந்தப்பட்டதை, 4 முறை அழுத்தமாகக் கூறுவார்! வெகுண்டு஢ சமாசாரத்தில், கற்றுக் கொடுக்க வேண்டிய ஒவ்வொன்றையும் 8 முறை சொல்லி, அதோடு நில்லாமல், அவனை 2 முறை திரும்ப கூறச்சொல்லி வாட்டி வறுத்தெடுத்து விட்டார்! "உன் தாத்தா கிட்ட டியூஷன் போணுன்றதை நினைச்சாலே வயத்தை கலக்கறதுரா" என்று அவன் புலம்பும்போது அவனைப் பார்க்க எனக்குப் பாவமாய் இருக்கும்! "நம்ம வாத்தியாரை விட என் தாத்தா எவ்வளவோ மேல் இல்லையா?" என்று நான் ஆறுதல் கூறுவேன்.

எங்களது வகுப்பு ஆசிரியரான திரு.ராமசாமி அய்யங்கார் கண்டிப்புக்கு பேர் போனவர். சிறுதவறு செய்தாலும் பிரம்பால் விளாசி விடுவார். நான் படிப்பில் கெட்டி, அதனால் அடி வாங்கும் பிரச்சினை இருந்ததில்லை. ஆனால், விதி ஒரு முறை வேறு ரூபத்தில் விளையாடி, அவரிடம் பிரம்படி பட வைத்ததை என்னவென்று சொல்ல?! காரணம்?

வேறு யார்? வெகுண்டு தான்! சுட்டுப் போட்டாலும் படிப்பேறாத அவனை ஓடவிட்டு நிதானமாகத் துரத்தி 'அந்தணன் இரக்கமில்லான்' என உரக்கச் சொல்லியபடி, ராமசாமி வாத்தியார் பிரம்படி வழங்குவது, வகுப்பறையில் வாடிக்கையாக நிகழும் ஒரு விஷயம் தான்! வெகுண்டுவும் லேசுப்பட்டவன் அல்லன். வாத்தியார் அடிப்பதற்கு முன்னமே, அவரை வெறுப்பேற்றும் வண்ணம், 'ஐயோ, இப்படி அடிக்கிறீங்களே, உயிர் போறதே, ஐயோ, கொல்றாறே!' என்று கூக்குரலிடத் தொடங்கி விடுவான். அச்சமயங்களில் வகுப்பிலுள்ள நானும் மற்ற மாணவர்களும் பீதி, பச்சாதாபம், சிரிப்பு போன்ற பல்வகை உணர்வுகளுக்கு ஆளாகி இஞ்சி தின்ற மந்திகள் போல் காட்சியளிப்போம்!?

வாத்தியார் ஒரு முறை வெகுண்டுவை ஏதோ ஒரு பாடத்தை மனப்பாடம் செய்து என்னிடம் ஒப்பிக்குமாறு கூறிச் சென்று விட்டார். அவனும் முயன்றான். ஆனால், அவனாவது ஒப்பிப்பதாவது!? என் கன்னத்தைத் தடவி கெஞ்ச ஆரம்பித்து விட்டான். நானும் கவசகுண்டலம் இல்லாத கர்ணனாக என்னை பாவித்துக் கொண்டு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முற்பட்டேன்!! வகுப்புக்குத் திரும்பி வந்த ஆசிரியரிடம் வெகுண்டு பாடத்தைப் படித்து அருமையாக ஒப்பித்து விட்டதாக பொய் உரைத்தேன். இதில் ஒரு தமாஷ் பாருங்கள்! 'பொய் உரைத்த வாய்க்கு போஜனம் கிடைக்காது' என்பார்கள். நானோ வெகுண்டுவிடம் போஜனம் வாங்கி உண்டதால், பொய் சொல்லும் நிலைக்கு ஆளானேன்!

விதி தன் விளையாட்டை ஆரம்பித்தது! சதா சர்வ காலமும் என் கூற்றை நம்பும் ராமசாமி வாத்தியார், என்றும் இல்லாத் திருநாளாக அன்று, 'சரி, நீ படித்ததை மறுபடி என்னிடம் ஒரு தடவை கூறு, பார்க்கலாம்!' என்று அந்த திருவாழத்தானிடம் கேட்டார். எனக்கோ அஸ்தியில் ஜுரம் கண்டது. வெகுண்டு அபரிமிதமாக விழிக்கவே, வாத்தியார் என் பக்கம் திரும்பி, 'படிப்போடு பொய் உரைப்பதும் உனக்கு நன்று வருமோ??' என்ற விபரீத வினாவெழுப்பி சில பிரம்படிகளை எனக்குப் பரிசாக வழங்கினார்.

அதுவரை பிரம்படியே கண்டிராத எனக்கு, அந்த அடிகள் தந்த வலியில் சப்தநாடியும் ஒடுங்கிப் போயிற்று! இரண்டு நாள் காய்ச்சல் வேறு! காய்ச்சலின் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது 'இனி வெகுண்டுவிடம் ஓசியில் வாங்கி உண்பதில்லை' என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்! என்ன செய்வது? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்! என் பள்ளி வாழ்க்கையில், நான் பட்ட முதலும் கடைசியுமான பிரம்படிகளைப் வாங்கித் தந்த பெருமை என்னருமை வெகுண்டுவுக்குத் தான்!

வெகுண்டுவை ராமசாமி வாத்தியார் அடுத்த வருடமும் 7-ஆம் வகுப்பில் உட்கார வைத்து விடுவார் என்று தான் நான் நினைத்தேன். ஆனால், அவன் தேர்ச்சி பெற்று என்னை அதிசயத்தில் ஆழ்த்தி விட்டான்! அடுத்த ஓரிரு வருடங்களில் அவன் தந்தையார் ஹோட்டலை மூடி விட்டார். அதன் தொடர்ச்சியாக வெகுண்டுவும் பள்ளியிலிருந்து விலகி அவன் குடும்பத்தார் வேறேதோ ஊருக்கு குடி பெயர்ந்து விட்டனர். ஹோட்டல் இருந்த இடத்தில் 'திருநெல்வேலி அல்வா ஹவுஸ்' என்ற போர்டு மாட்டிய இனிப்புக் கடை தோன்றியது. காலப்போக்கில் வெகுண்டுவைப் பற்றிய ஞாபகங்கள் என்னை விட்டு மெல்ல மெல்ல விலகி விட்டன. சிவாஜி பட வசனங்களும் பாடல்களும் கூடத் தான்!

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*


நாலைந்து வருடங்களுக்கு முன், ஒரு நவராத்திரி விடுமுறையில் என் மனைவி மகளுடன் மைசூரை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தேன். மைசூரின் உலகப் பிரசத்தி பெற்ற தசரா ஊர்வலத்தை கண்டு ரசிக்க ஒரு ஜன சமுத்திரமே திரண்டிருந்தது. ஜம்பூ சவாரி என்றழைக்கப்படும் அவ்வூர்வலத்தில் பிரதான தளபதி முன்னே வர, தேவி சாமுண்டேஸ்வரியின் விக்ரகம் வைக்கப்பட்ட தங்க ஹௌடாவை முதுகில் சுமந்தபடி அழகாக அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட யானை ஒன்று பின்னே நடந்து வந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மற்ற பட்டாடை உடுத்திய கம்பீர யானைகளும், குதிரை வீரர்களும், பாண்டு மற்றும் நாகஸ்வர வாத்தியக்காரர்களும், கலைக்குழுக்களும் வரிசையாக வந்த காட்சி பார்க்க மிக அற்புதமாக இருந்தது.

ஜம்பூ சவாரி முடிந்ததும், என் மனைவி 'அம்மு மத்யானம் ஒண்ணுமே சாப்பிடலை. வழியிலேயே எங்கேயாவது சாப்டுட்டு அப்றமா நம்ம ரூமுக்கு போயிடலாம்' என்றாள். ஏதோ ஒரு ஹோட்டலில் எதையோ சாப்பிட்டு விட்டு பில்லுக்கு பணம் தரும்போது, கல்லாவில் அமர்ந்திருந்தவர் என்னை ஒரு மாதிரி சந்தேகப் பார்வை பார்ப்பதை கவனித்து 'சார், நல்ல நோட்டு தான், கவலையே படாதீங்க!' என்றேன். அவர் இன்னும் சந்தேகம் விலகாமல், ஒருவித பிரமிப்புடன் 'சார், நீ ... நீங்கள் ஹிண்டு ஹைஸ்கூல் பாலாஜி தானே?! என்னைத் தெரியலையா? நான் தான் வெகுண்டு!' என்றார்(ன்)!?

என்னுடன் பள்ளியில் படித்த வெள்ளைக் குண்டன், அச்சமயம் சற்றே மெலிந்து கறுத்து முன்மண்டையில் பெருமளவு முடியும் இழந்திருந்ததால், என்னால் அவனை யாரென்று அறிய முடியாமல் போனது! வெகுண்டு கேட்ட அடுத்த கேள்வி,'ராமசாமி வாத்தியார் எப்படி இருக்கிறார்?'. வாத்தியார் பல ஆண்டுகளுக்கு முன்னரே வகுப்பில் பாடம் எடுக்கும்போதே மாரடைப்பால் இறந்து விட்டதை அவனிடம் சொல்ல எனக்கு மனம் வரவில்லை! அவனுக்காக ஒரு முறை வாத்தியாரிடம் பொய் சொல்லி பிரம்படி பட்டது என் நினைவில் நிழலாடியது! சிறுவயதில் இருந்தது போலவே, அச்சமயமும் சாப்பிட்டதற்கு பணம் வாங்க மறுத்து வெகுண்டு என்னை மேலும் கடன் பட்டவனாக ஆக்கி விட்டான்!

Published in Thinnai Nov 18 2004

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, November 18, 2004

ஜெயேந்திரர் அறியா ஆறு கட்டளைகள்!


1. தன்னைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் டம்மியாக வைத்திருக்க வேண்டிய சூட்சமங்களை கற்காமல் விட்டது!

2. தான் கைது செய்யப்பட்ட நிகழ்வை படம் பிடித்து டப்பிங்கோடு ஒளிபரப்ப ஒரு 'சங்கர டிவி' யை தொடங்காமல் விட்டது!
3. நடுத்தெருவில் அமர்ந்து கொண்டு 'தர்ணா' செய்யும் சாகஸத்தை அறிய மறந்தது!
4. செம்மொழியாம் தமிழ்மொழியில் புலம்புவதற்கு தேவையான புலமையைப் பெறத் தவறியது!
5. தனக்குச் சாதகமான வகையில் ஆட்களை சேர்த்துக் கொள்ளும் அல்லது கழற்றி விடும் சாணக்கியத்தனம் இல்லாமல் இருந்தது!
6. சமயதிற்கேற்ப (TIMING SENSE) ஊடகங்களுக்கு அற்புதமாக ஸ்டேட்மெண்ட் தரும் சாதுரியம் இல்லாமல் இருந்தது!

இவ்வாறு தேவையானவற்றை அறிய / கற்கத் தவறிய ஜயேந்திரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவரே :-)
மேற்கூறியவை போல் இன்னும் ஏதாவது இருப்பின், நீங்களும் கூறலாம்!

Wednesday, November 17, 2004

ஒரு மரத்தின் இறப்பு!

என்னை மிகவும் பாதித்த 'Death of a Tree' என்ற ஒரு ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பு இது!

அந்த மின்ரம்பத்தின் பேரிரைச்சல்
மெல்ல மெல்ல அடங்கி ஓய்ந்தது!
அவள் முன்னோக்கிச் சாய்ந்தாள், வீழ்ந்தாள்!


ஒரு சோகமிக்க திடீர் தாக்கம்,
அப்பசுமைத் தாயின் ஊனத்திலும்
அவள் நீட்டல்களின் இறுதி மடங்கலிலும்,
மிச்சமிருந்த அவளை மெல்லத் தீண்டினேன்!

ஒரு நூறு ஆண்டுகளுக்கான நளினப் பேரழகு அழிந்தது!
அவளது இலைகளின் வெளிர் நிறமானது
அக்காலை நேரத் தூறலில் ஒன்றறக் கலந்தது!

அந்த வனராணியை வீழ்த்திய பெருமை ஒரு
பெருங்காற்றுக்கோ புயலுக்கோ சேர்ந்திருக்கலாம்!
அவளுக்கு அது ஒரு சரியான யுத்தம் விளைத்த
கௌரவ இறப்பாகவும், இந்த அவமானமிக்க
சர்வ நிச்சயத்தினும் ஏற்றதாகவும் அமைந்திருக்கலாம்!

எதனால்? இவ்வீழ்ச்சி மானுடன் கையால் விளைந்தது,
மனிதன் என்றாலே துன்பமும் வலியுமே!
நான் அவ்விடத்தை விட்டு வேதனையோடு
ஒரு இழப்பை நன்குணர்ந்து அகன்று சென்றேன்!


இதுவும் வாழ்க்கை விளையாட்டில் ஒரு அங்கம் தானோ?


ஒரு 'வெண்பா' முயற்சி!

சைதன்யா மீனாக்ஸ் போன்றோரின் வெண்பாக்கள் தந்த ஊக்கத்தால், நானும் இந்த விஷப்பரீட்சையில் இறங்கினேன் :-) அதாவது, அவர்கள் எழுதிய வெண்பாக்களின் வடிவங்களை என்னால் இயன்ற அளவு அப்படியே பிரதியெடுத்து கீழுள்ளவற்றை புனைந்துள்ளேன்! நான் வெண்பா இலக்கணமெல்லாம் மறந்து பலகாலம் ஆகி விட்டது:-( தவறுகள் இருக்கலாம் (இருக்கும்!), தளை தட்டும்! சுட்டிக் காட்டுங்கள், திருத்தி/கற்றுக் கொள்கிறேன்! வெண்பாவைப் பற்றி வினாக்கள் எழுப்புவதை விட, இந்த அப்ரோச் சற்று சுவாரசியமானதல்லவா?

சங்கர மடத்துக்கே தலைவராம் ஜெயேந்திரர்
பங்கமது வந்ததே பேருக்கு - ஆயினும்
சாய்பாபா சங்கதி போலே இதுவும்
போய்விடும் உடைப்பில் பாரு!

ஜங்கிள்க்கு ராசா வீரப்பனை துணிஞ்சு
சிங்கிளா டிரைவராப் போயி - வெளியே
கொணர்ந்த சரவணனை பாராட்டி நிலமும்
பணமும் கொடுத்தார் அம்மா!

தாத்தா கொடுத்த பிரஷரில, எங்கம்மா
காத்தா எடுத்த நடவடிக்கை - அதுலே
பழிக்குத்தான் ஆளாயி செயிலுக்கும் போயி
முழிபிதுங்கிப் போனார் சத்குரு!

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, November 14, 2004

ஜெயேந்திரர் கைது - சில எண்ணங்கள்

ஜெயேந்திரர் கைது பற்றிய செய்தியும், அதன் பின்னணியும் இச்சமயம் அனைவரும் அறிந்த ஒன்றே. நானும் வலைப்பதிவுகளில் இது குறித்து எழுதப்பட்ட அனைத்தையும் படித்து விட்டுத் தான், இதை எழுதுகிறேன். குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது அவசியம் தான். ஆனால், இவ்விஷயத்தில் அது நிறைவேற்றப்பட்ட விதம் மிக்க கண்டனத்துக்கு உரியது. இரவோடு இரவாக, தனி விமானத்தில் பயணம் செய்து, மெஹ்பூப் நகரில் ஒருவரை கைது செய்தது, அனாவசியமாகவும் அபத்தமான செயலாகவும் தொன்றுகிறது. அவர் என்ன வீரப்பன் போல தப்பியோடக் கூடியவரா? அவரை அழைத்து விசாரணை செய்து அதன் தொடர்ச்சியாக அவரை கைது செய்திருக்கலாம். அவரும் ஒத்துழைத்திருப்பார்.

கலைஞரை இரவில் கைது செய்தபோது, வயதில் மூத்த ஒரு பண்பட்ட அரசியல் தலைவரிடம் அவ்வாறு நடந்து கொள்ளலாமா என்று பயங்கரமாக கண்டனம் தெரிவித்த பலர் இப்போது வாய் மூடி மௌனிகளாக இருப்பது ஏன்? ஜெயேந்திரரும் ஒரு பாரம்பரியம் மிக்க மடத்தின் தலைவர் தானே, அவரும் வயதில் மூத்தவர் தான், உடல் நலம் சற்று குறைந்தவர் தான்! முக்கியமாக, தனி விமானத்தில் ஆயுதம் தாங்கிய காவலரை அனுப்பி அவரை சென்னை கொண்டு வந்தது சற்று ஓவர் தான். அவ்வாறு ஆயுதம் ஏந்தியவரை விமானத்தில் அனுப்புவதற்கான அனுமதியும் உரிய அதிகாரிகளிடம் பெறப்படவும் இல்லை! மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது எவ்விதத்தில் நியாயம்?

ஜெயேந்திரரின் மீதான வழக்கு நேர்மையான முறையில் நடத்தப்பட்டு, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதே சமயம், அவருக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கக் கூடாது என்ற சிலரின் வாதத்திலும் அர்த்தமும் இல்லை, நேர்மையும் இல்லை!?! குற்றம் சாட்டப்பட்ட ஒரு அடிமட்ட அரசியல்வாதி கூட தன் செல்வாக்கை பயன்படுத்தி சிறையில் பல சலுகைகள் பெறுகிறார் என்பது நிதர்சனமான உண்மை! சொல்லப்போனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறு செய்வது தான் ஜனநாயகத்தில் கண்டிப்பாக மன்னிக்கக் கூடாத ஒன்று. அவர்கள் தான் எந்த ஒரு சலுகையும் பெற முடியாத வகையில், சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதே என் வாதம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இங்கே வெறும் வாய் வார்த்தை தான் என்பதை யாரும் மறுக்க இயலாது. எனவே, ஜெயேந்திரரின் வயதையும், அவர் பெருமை மிக்க ஒரு மடத்தின் தலைவர் என்பதையும் கருத்தில் கொண்டு சலுகைகள் வழங்குவதால் ஒன்றும் குடி முழுகி விடாது! சிறப்புச் சலுகைகள் தரக்கூடாது என்று இப்போது பேசுகிறவர்கள் அழகிரி கைதானபோது அதைப்பற்றி வாயே திறக்கவில்லையே?!?

ஜெயேந்திரர் என்ற தனிப்பட்ட மனிதரின் பல செயல்களில் எனக்கும் உடன்பாடு கிடையாது. குறிப்பாக, அயோத்தி விவகாரத்தில் அவர் மூக்கை நுழைத்தது, திருப்பதி சென்று ஒரு குழப்பத்தை உண்டாக்கியது என பல விஷயங்கள் உண்டு. சிலர் சொல்வதை போல், அவரால் இந்து மதத்திற்கே களங்கம் என்ற கூற்றையும் என்னால் ஏற்க இயலாது. போப்பாண்டவர் உலகளாவிய கத்தோலிக்கர்களுக்கு தலைவராக இருப்பது போல், ஜெயேந்திரர் ஒன்றும் உலகளாவிய இந்துக்களுக்கு தலைவர் (அல்லது மதகுரு) இல்லை. அவரை தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை சைவர்களின் மரியாதைக்குரியவர் என்று மட்டுமே கொள்ளலாம்! ஜெயேந்திரர் கொலை செய்யத் தூண்டினாரோ இல்லையோ, இச்சம்பவத்தினால் இந்துக்களுக்கு அவப்பெயர் வர காரணமாகி விட்டார். என்னவோ போங்கள், நாட்டில் நடப்பது ஒன்றும் நன்றாக இல்லை!

என்றென்றும் அன்புடன்
பாலா


Friday, November 12, 2004

பல்லவியும் சரணமும் - V I I

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே!
போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் :-))

1. நியாயங்களோ பொதுவானவை, புரியாமல் போனது ...
2. உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும், நிலை உயரும்போதும் பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் ...
3. நம்ம காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்ல, நானொன்று நீயன்று தாம்மா ...
4. உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ?
5. பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே, உறவுக்கு உயிர் தந்தாயே ...
6. வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே, நல்ல குடும்பம் ஒளி மயமாக ...
7. எதனைக் கண்டான், மதங்களை படைத்தான் ....
8. நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே, நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் ....
9. உண்டாவது ரெண்டானதால், ஊர் போவது நாலானதால், தாயாலே வந்தது, தீயாலே வெந்தது ...
10. பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமாக, நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாடு, மன்மதன் சேனைகள் ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, November 11, 2004

கலைத்தாய்க்கு கோலிவுட் எடுத்த நன்றி விழா!

நமது தமிழ்த் திரையுலகத்தினர் தாங்கள் அ.இ.அ.தி.மு.க பிரமுகர்களுக்கு எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை இந்த நன்றி கூறல் விழாவின் மூலம் மிக அற்புதமாக நிரூபித்துக் காட்டியுள்ளனர்! விழாவில் பேசிய ஒவ்வொருவரும் 'அம்மா'வுக்குச் சூட்டிய புகழாரத்தின் விளைவு, அதை டிவியில் பார்த்த எனக்கே சீதளத்தால் (ஐஸ் மழையைக் கண்டதால்!) காது குத்தல் வந்து விட்டது! பேசிய அனைவரும், விழா மேடையை ஒரு நாடக மேடையாக்கி அமர்க்களமாக நடித்துத் தள்ளி விட்டார்கள்!

மனோரமா போன்ற, பல படங்களில் சிறப்பாக நடித்துள்ள ஒரு மூத்த நடிகை ஏன் இவ்வாறு முதல்வரை 'பொறுமையில் பூமாதேவி, தங்கத்தாரகை, வீரப்பன் என்னும் நரகாசுரனை வதம் செய்த அன்னை சத்தியபாமா' என்றெல்லாம் (டிவியில் பார்ப்பவர்களுக்கு இந்த முகஸ்துதி எவ்வளவு கிண்டலாகவும் அபத்தமாகவும் இருக்கும் என்பதை உணராமல்!) புகழ்ந்து தள்ளினார் என்பது அவருக்கே வெளிச்சம். சங்கப்புலவர் போல் 'அம்மா' மேல் ஒரு பாடலும் இயற்றிப் பாடினார். அவருக்கு அப்படி புகழ வேண்டிய கட்டாயம் இருப்பின், சொல்ல வேண்டியதை ஒரு கேஸட்டாகப் போட்டால் கட்சிக்காரர்களுக்கு உபயோகமாக இருக்கும்!

இயக்குனர் சிகரம் பேசும்போது, திரைப்படத்துறையின் ஏதோ ஒரு கோரிக்கையை 'அம்மா'வின் பொற்பாதங்களில் சமர்ப்பித்தார்!?! ராதாரவி 'அம்மா'வை தெய்வம் என்று கூறியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி பேசியதைப் பற்றி (நாம்) பேசாமல் இருப்பது நலம்! விழாவில் பேசியவர்களில் கமல்ஹாசன் ஒருவர் தான் சற்று நேர்மையாகப் பேசினார். தமிழ்த் திரையுலகில் பலருக்கு நடுநிலை என்பதே கிடையாது. சமயத்திற்கேற்றபடி பல்டி அடிப்பதில் வல்லவர்கள்.

நமது முதல்வர் திருட்டு விசிடியை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் மூலம் கலையுலகிற்கு பெரிய நன்மை செய்துள்ளார் என்பதை மனமார ஒப்புக் கொண்டாலும் கூட இந்த விழாவில் நடந்தது தனி மனித வழிபாட்டின் உச்சம் என்றே கூற வேண்டும். பத்ரி கூறியது போல் சில நேரங்களில் நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. எனக்கென்னவோ நம் முதல்வர் இவ்வாறு தன்னை பொது மேடைகளில் அளவுக்கு மிக அதிகமாக (எதையோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு!) புகழ்வதை தடை செய்தல் அவசியம் என்று (முதல்வரின் நலம் விரும்பி என்ற முறையில்) நினைக்கத் தோன்றுகிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, November 09, 2004

ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்

திராவிட வேதம் என்று அழைக்கப்படுகிற திவ்யப்ரபந்தத்தில் வரும் பல பாடல்களில் காணப்படும் பக்தி ரஸமும் வைகுந்தன் மேல் ஒருவித அதிதீவிர அன்பும் பூரண சரணாகதி தத்துவமும் தமிழில் வெறெந்த பக்தி இலக்கியத்திலும் இவ்வளவு அழகாகவும், எளிமையாகவும் சொல்லப்படவில்லை என்று தோன்றுகிறது. கீழுள்ள ஆண்டாள் பாசுரங்களில் 'நாராயணனே யாதுமாய் நிற்கிறான், அவனே எனக்கு சகலமும்!' என்ற கருத்து எவ்வளவு அருமையாகக் கூறப்பட்டுள்ளது என்று பாருங்கள்!

501@..
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப்*
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்*
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா* உன்தன்னோடு-
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை*
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே*
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்


502@..
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்-
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து *நீ-
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்


அடுத்து திருப்பாணாழ்வாரின் (நாலாயிரத்தில் அவர் அருளியது பத்து, அத்தனையும் நல்முத்து!) அமலனாதிபிரானில் வரும் 3 அற்புதமான பாசுரங்களைத் தந்திருக்கிறேன். அரங்கனின் பேரெழில் அவர் உள்ளத்தை நிறைத்ததையும், அரங்கன் அவருள் புகுந்து அவரை ஆட்கொண்டதையும், அமுதை ஒத்த அரங்கனைக் கண்டபின் வேறெதையும் காணும் ஆசை அவரை விட்டு அகன்று விட்டதையும் ஆனந்தப் பெருக்கோடு சொல்லியிருக்கிறார்!

931@
பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே.


935@..
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.


936@..
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே.


அடுத்து திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியிலிருந்து, திருவேங்கடமுடையான் தரிசனத்தால் உண்டான பேருவகையோடு எழுதப்பட்ட 2 எளிய பக்திப் பாடல்களைத் தந்திருக்கிறேன்.

1034@
தெரியேன் பாலகனாய்ப்* பலதீமைகள் செய்துமிட்டேன்*
பெரியேனாயினபின்* பிறர்க்கே உழைத்து ஏழையானேன்*
கரிசேர் பூம்பொழில்சூழ்* கனமாமலை வேங்கடவா.,*
அரியே. வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே.


1046@

வந்தாய் என்மனம் புகுந்தாய்* மன்னிநின்றாய்*
நந்தாத கொழுஞ்சுடரே* எங்கள் நம்பீ.*
சிந்தாமணியே* திருவேங்கடம்மேய எந்தாய்.*
இனியான் உன்னை* என்றும் விடேனே.


அடுத்து ஸாம வேதத்தின் சாரம் என்றுணரப்படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து சில பக்திப் பரவசமான பாசுரங்களைக் காணலாம். மாறன் மற்றும் சடகோபன் என்றழைக்கப்பட்ட நம்மாழ்வார் வைகுண்டத்தின் தலைமைத் தளபதியாகக் கருதப்படும் விஸ்வக்ஷேனரின் அவதாரம் என்று கூறுவர். அவர் இப்பூமியில் 35 வருடங்களே வாழ்ந்தார்.

அவரைப் பற்றிய ஒரு சுவையான நிகழ்வு ஒன்று இதோ! நம்மாழ்வார் குருகூரில் வாழ்ந்த காலத்தில், வட இந்தியாவில் இருந்த புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மதுரகவி, அயோத்தியின் தெற்கு வானத்தில் ஒரு அற்புதமான ஒளியைக் கண்டார். அவ்வொளியின் மூலத்தை அறியும் விருப்பத்தில் தெற்கு நோக்கி பயணப்பட்டார். திருவரங்கத்தை அடைந்து இன்னும் சற்றே தெற்கில் உள்ள குருகூரை சென்றடைந்தபோது அவ்வொளி ஒரு புளிய மரத்தடியில் தவமிருந்த நம்மாழ்வாரின் திருமேனியில் கலந்திருப்பது மதுரகவிக்கு புலப்பட்டது! அன்றிலிருந்து, மதுரகவி அங்கேயே தங்கி, நம்மாழ்வாரின் பிரதான சீடராகி நம்மாழ்வர் அருளிய பாடல்களை பதிவு செய்ததும், அவருக்கு தொண்டு புரிந்ததும், நாம் அறிந்ததே.

2956@..
வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,*
வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*
செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய்குந்தா* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.


3450
வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,
செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே,
அந்தோ! அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே.


3451
அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே.


என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, November 07, 2004

புஷ் வெற்றி - உலகுக்கு ஆபத்து!

2000-இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ·ப்ளோரிடா மாகாணத்து வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டபோது, அம்மாகாணத்தின் உள்துறை செயலரான கேத்தரின் ஹாரிஸ், புஷ்ஷின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக இருந்தது, எத்தனை பேருக்குத் தெரியும்!? அவரது துரித(!) நடவடிக்கைகளால் அம்மாகாணத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கறுப்பு இனத்தவரின் பெயர்கள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, அவர்கள் மேல் காவல்துறை குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி, இது நடைபெற்றது. [நம் நாட்டை, குறிப்பாக பீகாரை எண்ணிப் பாருங்கள்! இது போல ஒன்று (கட்டாய!) நடைமுறைக்கு வந்தால், தேர்தலில் நிற்பவர்கள் மற்றும் வாக்காளர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் தகுதி இழந்து விடுவார்கள் அல்லவா?] மேலும், கறுப்பினத்தவர் வாழும் மாகாணத்தின் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை!

முதலில், புஷ் வெற்றி பெற்றார் என்றார்கள். பிறகு பத்திரிகைத்துறை நடத்திய மறு கணக்கெடுப்பில் அல்-கோரே அதிக வாக்குகள் எடுத்ததாகக் கண்டறியப்பட்டு இறுதியில் உச்சநீதி மன்றத்தின் தலையீட்டால் புஷ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இதை அறிவித்த நீதிபதி ஸ்கேலியாவின் மகன், புஷ்ஷின் வழக்கறிஞர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்றே!

2004 தேர்தலில் அத்தகைய பிரச்சினை எதுவும் இல்லை! புஷ் ஜெயித்ததற்கு இரண்டு ஆதார காரணங்களைக் கூறலாம். ஒன்று, பெரும்பான்மை அமெரிக்க மக்களின் 'உலகம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, என் பாதுகாப்பும் சுகவாழ்வும் மட்டுமே எனக்கு முக்கியம், அதை செயல்படுத்தக் கூடியவர் அறிவு குறைந்தவராக, தன் சுயநலத்துக்காக (அதாவது, ஈராக்கின் எண்ணெய் வளத்தை உறிஞ்சுவது!) உலக நாடுகள் எதிர்த்தாலும் மோசமான செயல்களில் ஈடுபடுபவராக இருந்தாலும் எனக்கு அக்கறையில்லை' என்ற குருட்டுப் பார்வை. மற்றது, அமெரிக்கவில் 9/11-க்கு பின்னர் வேகமாக வளர்ந்து வரும் கிறித்துவத் தீவிரவாதக் கொள்கைகள்.

பெரும்பான்மை உலக மக்கள் (அமெரிக்காவின் ஈராக் போருக்கு ஆதரவான நாடுகளையும் சேர்த்து) புஷ் தேர்தலில் தோற்க வேண்டும் என்றே விரும்பினார்கள். புஷ் பிற நாட்டு மக்களின் மேல் ஜனநாயகத்தை தன்னிச்சையாகத் திணிக்க முயலும் அராஜகப் போக்கினால் தான் உலகளாவிய வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார். முக்கியமாக ஈராக் போர்க் கைதிகள் மேல் நடத்தப்பட்ட அசிங்கமான முறைகேடான சம்பவங்கள் வெளிவந்தபோது பலர் கொதித்துப் போய் விட்டனர். புஷ் இதையெல்லாம் உணர்ந்ததாகவும் தெரியவில்லை, அப்படியே உணர்ந்திருந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட்டதாகவும் தோன்றவில்லை! அவர் அமெரிக்கா தான் 'உலகக் காவலர்' (Policeman of the World) என்று திடமாக நம்பிக் கொண்டு முட்டாள்தனமான காரியங்களை செய்து வருகிறார். இன்னும் செய்வார் என்று உலக மக்கள் அஞ்சுகின்றனர்!

ஆனால், பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு புஷ்ஷின் நடவடிக்கைகளால் உலகமே தங்களுக்கு எதிராகப் போனது பற்றி எந்த அக்கறையும் கவலையும் இல்லை என்றே கூறலாம். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அமெரிக்கா தனது முஷ்டி பலத்தால் (Fist power) பிற நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் மட்டுமே! அமெரிக்காவின் 50 லட்சம் இவாஞ்சலிகல் (Evangelical) தீவிர வகைக் கிறித்துவர்கள் புஷ்ஷின் வெற்றிக்காகத் தீவிரமாக(!) பாடுபட்டனர் என்பதும் ஒரு முக்கியச் செய்தி. இவர்கள் புஷ் மற்றுமொரு போர் (தீவிரவாதத்திற்கு எதிராக என்ற போர்வையில்!) தொடுத்தாலும் அதை வரவேற்கத் தயாராகவே உள்ளனர். அதற்கு, புஷ் ஒரு மறுபடி பிறந்த (BORN AGAIN) கிறித்துவர் என்ற காரணமே அவர்களுக்குப் போதுமானது. ஜார்ஜ் WORST புஷ்ஷின் அடுத்த இலக்கு சிரியாவோ, இரானோ, வடகொரியாவோ, யார் கண்டது? ஜான் கெர்ரி தோற்றார் என்பதை விட இத்தேர்தலில் உலகமே தோற்று விட்டது என்ற கூற்று சாலப் பொருந்தும்!

Saturday, November 06, 2004

பல்லவியும் சரணமும் - V I

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே! 'kudigaaranin uLaRaLgaL' வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர், Icarus Prakash, Singai Anbu மற்றும் சந்திரவதனா ஆகியோருக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு :-))

1. சொர்க்கமும் நரகமும் நம் வசமே, நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே ...
2. வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன் ...
3. ... ஏந்தி வாருங்கள் தீபங்களே, கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே ...
4. வீழும் கண்ணீர் துடைத்தாய், அதில் என் விம்மல் தணியுமடி ...
5. கூனல்பிறை நெற்றியில் குழலாட, கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட ...
6. காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு, கருணை என்றொரு பேரெதற்கு ...
7. உன் பார்வை போலே என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி ...
8. எங்கோ வாழ்க்கை தொடங்கும், அது எங்கோ எவ்விதம் முடியும் ...
9. ... பட்டு விடும் மேனி, சுட்டு விடும் நெருப்பு, சூனியத்தின் நிலைப்பு ...
10. நீ எந்தன் கோயில், நான் அங்கு தெய்வம், தெய்வத்தின் முன்னே ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, November 05, 2004

ஆனந்தமான இந்திய வெற்றி!

கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்! நான் ஒரு 150+ ரன்கள் அவசியம் என எண்ணினேன். நமது பௌலர்களோ 100 ரன்களே போதும் என்று கூறும் வகையில் ஆஸ்திரேலியாவை 93 ரன்களில் சுருட்டி விட்டனர்.

சச்சின் தான் இன்றைய நமது ஆட்டத்திற்கு, கில்லஸ்பியின் ஒரு ஓவரில் அடித்த 3 பவுன்டரிகள் வாயிலாக, முதல் உத்வேகம் தந்தார். இதனால், சிறிது தடுமாறிக் கொண்டிருந்த லஷ்மண் உற்சாகம் பெற்று, அடுத்த ஓவரில், மெக்ராத்தை சற்று விளாசினார். ஆட்டம் சூடு பிடித்து, ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக வழி வகுத்தது.

அலுவலகத்தில் இருந்த நான், ஆஸ்திரேலியா ஸ்கோர் 58/7 இருந்தபோது பக்கத்தில் உள்ள நண்பர் இல்லத்துக்கு விரைந்தேன் (நல்ல மழையில்!), இந்திய வெற்றியை TV-யில் கண்டு களிக்கலாமே என்று. இன்னுமொரு விக்கெட் 78-இல் வீழ்ந்தது. 30வது ஓவரின் முடிவில் ஸ்கோர் 93/8. நான் கொஞ்சம் மூட்அவுட் ஆகி, இந்தியா ஜெயிக்காது போல் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு, நண்பரின் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகத்திற்கு சென்று பார்த்தால், ஓரு Amazing Indian victory!!!!! அதைப் பார்க்க முடியாத துரதிருஷ்டக்காரன் ஆகி விட்டேன்!

இந்த டெஸ்டில் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் முரளி கார்த்திக் (ஆட்ட நாயகன் விருது மிகப் பொருத்தம்!) என்பதை யாரும் மறுக்க இயலாது. 2 இன்னிங்குகளிலும் முக்கிமான விக்கெட்டுக்களை, சரியான தருணங்களில் வீழ்த்தினார்!! Hats off to him! 3-0-வை விட 2-1 சற்று ஆறுதலாக உள்ளது!

கிளார்க் சற்று முன்னதாகவே பந்து வீச வந்திருந்தால் என்ன ஆகியிருக்குமோ??? Rediff-இல் சொன்னது போல், "India escape to victory" என்பது பொருந்தும் என்றே நினைக்கிறேன்!!! Anyway, I am feeling great!

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, November 03, 2004

இரண்டு பழைய புதுக்கவிதைக் 'கிறுக்கல்கள்'

கீழே பதியப்பட்டது, பொறியியல் கல்லூரி வாழ்க்கையின் கடைசி மாதங்களில் எழுதியது. அச்சமயத்தில், ஒவ்வொருவரும் அவரவர் எதிர்காலத்தைப் பற்றிய கவலையிலும், பயத்திலும் இருந்ததால், எங்களிடையே லேசான பொறாமையும், 'அவன் நம்மை மிஞ்சி விடுவானோ?' என்ற அச்சமும் சற்றே தலை தூக்கின. ஒருவருக்கொருவர் உதவி செய்யும் சூழ்நிலை சற்று பாதிக்கப்பட்டது. இதனால் எங்கள் செயல்களில் ஒருவித Negativism இருந்தது எனலாம்! அச்சூழலை (எங்களிடையே இருந்த சிலரின் நடவடிக்கைகளை), நகைச்சுவையாக வெளிப்படுத்த நான் எடுத்த முயற்சி என்று கீழிருப்பதைக் கொள்ளலாம்!

இப்பொழுதெல்லாம் ஒழிப்புலகச் சக்ரவர்த்தியாவதற்கு
காலேஜிலே பயங்கரப் போட்டி!

தான் 'GATE'க்கு படிக்கவில்லையெனில், படிக்கும் பிறருக்கும்
புத்தகம் தர மறுப்பவர் ஒரு வகை!

'PERCENTILE' தியரி அறிந்து படிப்பவரை
சினிமாவுக்கு அழைப்பவர் ஒரு வகை!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
கும்கும்மென்று 'GATE'க்கு குத்தி விட்டு
'நான் SCOOT' என்று சிரிப்பவர் ஒரு வகை!

'ப்ராஜெக்ட் செய்வோம் வாரீர்' என்று மக்களை திரட்டி விட்டு
சமயம் பார்த்து அவரை 'த்ராட்டில்' விடுபவர் ஒரு வகை!

'GATE' எழுதும் நண்பர்கள் டிவி, சினிமா பார்க்கச் சென்றால்
மனதுள் மகிழ்பவர் ஒரு வகை!

இவர்கள் மத்தியில் நண்பர்களின் 'PERCENTILE'-ஐ
கூட்டுவதற்காகவே 'GATE'க்கு 100 ரூபாய்
தண்டம் அழுத நான் ஒரு வகை :-(

பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது எழுதிய ஒரு கவிதை அஞ்சலி கீழே.

காரீயத்திற்கு பொன்னின் மேல் இத்தனை வெறுப்பா?
இல்லையெனில் பதினாறு துண்டுகள் சேர்ந்து பாய்ந்து
நிலம் சாய்த்திருக்குமா அப்பொன் மேனியை!
இந்திய வரலாற்றுப் புத்தகத்தில் அக்டோ பர் 31
குறித்த பக்கத்தில் எழுத்துக்கள் இருக்க முடியாது,
கரைத்து விடுமே அவற்றைக் கண்ணீர்!
புனித குருத்துவாராக்கள் ஆயுதக் கிடங்குகளானால்
செயற்கை பூகம்பங்கள் நாட்டின் நலமழிக்க முயலும்!
தனி நாடு கேட்கும் கயவர் கூட்டம்
ஆளுக்கொன்றாக தங்கள் தலையிலே
'காலி ஸ்தானம்' வைத்திருக்கும்போது
எதற்கவர்க்கு புதியதொரு 'காலிஸ்தான்'!
நாட்டைத் துண்டாட எண்ணும் போர் வெறிக் கழுகுகளுக்கு
மற்றுமொரு சமாதானப்புறா பலியிடப்பட்டு விட்டது!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, November 01, 2004

எப்போதோ (பொழுது போகாமல்!) எழுதிய சில 'கவிதை'கள்!

கீழே பதியப்பட்டவை கிட்டத்தட்ட 20 வருடங்கள் தொன்மையானவை!?!? எனவே, படித்து விட்டு தயவு செய்து திட்டவோ அடிக்கவோ வராதீங்க! படிச்சதுக்கு அப்பால, கண்டுக்காம போய்கினே இருங்க!

1. பார்வையைப் பொறுத்து!

கவிதைக் கப்பலின் மேல் எனது
'கற்பனை' எனும் படகு மோதுவதால்
சிதறப் போவது படகு தானே,
கப்பலுக்கு சேதம் அதிகமில்லை!
அதனால் தான் நானும் கவிதை எழுதத் துணிந்தேன்,
என்றேன் என் தோழனிடம், அதற்கு அவன்,
'கவிதை' விமானத்தின் மேல் உன் 'கற்பனை' பறவை
மோதுவதால் விளையும் பங்கத்தை யோசி, என்றான்!

2. ஜில்-1

இப்பொழுதெல்லாம் தென்றல் சிறிது வேகமாக வீசினால்
என் மனதில் மகிழ்ச்சிக்கு பதில் அச்சமே பிறக்கிறது!
உன் துடி இடையை முறிக்க வாயுதேவன் அனுப்பிய
அஸ்திரம் தானே அது!

3. ஜில்-2

லேசான காய்ச்சல் குணமடைய
டாக்டரிடம் சென்றேன் ஒரு முறை,
ஸ்டெத்தை நெஞ்சில் வைத்தவர்
திகைத்து விட்டார்!
'என்ன உங்கள் இதயத் துடிப்பையே
உணர முடியவில்லையே என்று!'
அவரறிவாரா நான் என் இதயத்தை
உன்னிடம் தந்திருப்பதை!
நான் டாக்டரிடம் செல்வதையே நிறுத்தி விட்டேன்
அவர் கேட்கும் இவ்வினாவுக்காகவே!!!

கீழுள்ளவை GCT வகுப்பறைகளில் ('கடி' பட்ட வேதனையில்!) எழுதியவை! சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை 'மன்னிக்க வேண்டுகிறேன்'!

மலைகளயும் சிலைகளையும்
வெறுத்தார் மாந்தரில்லை!
நான் மனிதனாக இல்லாவிடினும் பரவாயில்லை,
எனக்கு 'அண்ணாமலை'யைக் கண்டாலே கடுப்பு!

செல்வங்கள் வேண்டாம்,
சிற்றின்பம் வேண்டாம்
தப்பித்தால் போதும்,
அ(ஆ)றுமுகத்திடமிருந்து!

தமிழ்நாட்டை தன் பேச்சுத் திறனால்
கலக்கினார் அந்நாள் அண்ணாதுரை!
இவரும் தான் எங்கள் அடிவயிற்றை கலக்குகிறார்,
தன் நவீன ஆங்கில உச்சரிப்புகளால்!
இவர் பல்ஸ் டெக்ணீ ...க் (Pulse Techniiiiique!) வகுப்பெடுக்கும்
எங்கள் புதுமை அண்ணாதுரை!

என்றென்றும் அன்புடன்,
பாலா

Saturday, October 30, 2004

பல்லவியும் சரணமும் - V

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே!

'kudigaaranin uLaRaLgaL' வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர் மற்றும் Icarus Prakash ஆகியோருக்கு இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை :-))

1. வள்ளியென்றால் வேலவனோடு, மன்னவனே நான் என்றும் உன்னோடு!
2. உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம் ...
3. கன்னி உன்னை கண்டதாலோ, தன்னை எண்ணி ...
4. சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?
5. தேனிலூறிய மொழியில் மொழியில் மலரும் மலரும் பூ மலரும்!
6. ஈன்ற தாயை நான் கண்டதில்லை, எனது தெய்வம் வேறெங்கும் ...
7. நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு ...
8. உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா, குல விளக்காக ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

அமெரிக்க இந்தியருக்கு $500,000 'மாமேதை' உதவித் தொகை!

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் (Massachusetts) உயிரியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணி மற்றும் ஆராய்ச்சி செய்து வரும் Dr.வம்ஷி மூதா இன்று அவரே நம்ப முடியாத அளவு புகழுக்குச் சொந்தக்காரர்! உலகப் பிரசித்தியும் பெற்று விட்டார்.

இந்த திடீர் புகழ் அவரைத் தேடி வருவதற்கு முன் அவர் மனித உடலில் உள்ள மைடோகாண்ட்ரியா (mitochondria) செல்களைப் பற்றிய ஆராய்ச்சியும், வம்சாவழி வகை நோய்களான நீரிழிவு கொலஸ்ட்ரால் உடல் பருமன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமும் செய்ததோடு, மருத்துவக் கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டும் வந்திருக்கிறார். செப்-18-ஆம் தேதி டாக்டருக்கு வந்த தொலைபேசி அழைப்பு (விருது பற்றி!) அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது!

ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும், 'மாமேதை விருது' என்று சொல்லப்படும், MacArthur Fellowship ஆன $500,000 பெறும் Dr.மூதாவிற்கு முன்னர், இந்திய வம்சா வழியினர் ஐந்து பேர் இவ்விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி! அதாவது, எழுத்தாளர்கள் வேத் மேத்தா, ரூத் ப்ரவேர் ஜப்வாலா, கவிஞர் AK ராமானுஜன், சரோத் கலைஞர் உஸ்தாத் அக்பர் அலி கான் மற்றும் பொருளாதார நிபுணர் செந்தில் முல்லைநாதன் ஆகியோர்.

இவ்விருதுக்குரியவரை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருப்பவர் மற்றும் அவரை பரிந்துரைத்தவர் பற்றிய விவரங்கள் ஒருபோதும் வெளியிடப்படுவதில்லை; பரிசுக்குரியவரை விண்ணப்பங்களை பரிசீலித்தோ, நேர்காணல் மூலமாகவோ தேர்வு செய்யும் வழக்கம் அறவே கிடையாது! பின் எப்படித் தான் ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்? இவ்விருதை பெற ஒருவருக்கு வேண்டியதெல்லாம் ஒரு பிரமிக்கத்தக்க அசலான எண்ணம் மட்டுமே!! அதை ஈடேற்றும் நோக்கில் அப்படைப்பாளியின் செயல்களோ அல்லது அராய்ச்சிப்பணியோ சமூக நலன்/பயன் சார்ந்து அமைந்திருத்தல் அவசியம்.

Dr.மூதா தனது ஆராய்ச்சியில், முதன்முறையாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுண்கணிதம் ஆகியவற்றை பயன்படுத்தி, மைடோகாண்ட்ரியா-வில் உள்ள வம்சாவழி நோய்க்குக் காரணமான ஹெலிகல் சுற்றுக்களை (Helical Twists) கண்டறிவதற்கான ஒரு உத்தியை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார். மேலும், ஒரு வகை மெடபாலிக் (Metabolic) நோய்க்குக் காரணமான மரபணுவும், TYPE-2 நீரிழிவு நோய் பற்றிய பல புதிய தகவல்களும் Dr.மூதாவின் அயராத உழைப்பினால், மருத்துவ உலகிற்குக் கிட்டிய முக்கியக் கண்டுபிடிப்புகளாகும்.

அவரது தந்தையாரான Dr.வெங்கட்ரமண ராவ், பணி நிமித்தம், அமெரிக்க மண்ணுக்கு பயணம் செய்தபோது மூதா அவர்கள் ஆறு மாதக் குழந்தை! பின்னர், மூதாவின் தந்தை, அவர் பெற்ற மக்களின் படிப்பு வாய்ப்பையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, அமெரிக்காவிலேயே தங்கி விட முடிவு செய்து விட்டார். தெலுங்கரான Dr.மூதா நாலைந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆந்திர விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்! இவரும் (பல தென்னிந்தியர்களைப் போல்!) ஒரு இட்லி-சாம்பார் பிரியர்; இன்னும் திருமணமாகாத ஒரு மிகத் தகுதியுடைய 33 வயது இளைஞரும் கூட!!!

Tuesday, October 26, 2004

சிறு வயது சிந்தனைகள் - பகுதி IV

இந்து உயர்நிலைப் பள்ளியில் (ஆறாவது முதல் +2 வரை) பயின்ற காலத்தில் எனக்கு பாடம் கற்றுத் தந்த ஆசிரியர்களை இன்று எண்ணிப் பார்க்கும்போது, ஏன் குருவை தெய்வத்தினும் உயர்ந்த ஸ்தானத்தில் (மாதா, பிதா, குரு, தெய்வம்!) வைத்தார்கள் என்ற புரிதல் ஏற்படுகிறது! இந்நிலைக்கு நான் உயர அவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது. பள்ளியில் என் ஆசிரியர்கள் மெச்சிய மாணவனாகத் திகழ்ந்தேன் என்றால் அது மிகையாகாது. பள்ளி வாழ்க்கையில் எனக்கு வழங்கப்பட்ட பரிசுப் புத்தகங்கள், இரண்டு பெட்டிகள் நிறைய வீட்டில் இன்னும் இருக்கின்றன. என் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் உபயோகமாக இருந்த அப்புத்தகங்களை என் மகள்களும் படிப்பார்கள் என்றே நினைக்கிறேன்!

இந்த அளவிலாவது என்னால் தமிழில் எழுத முடிகிறதென்றால், அதற்கு காரணமாக இருந்தவர்கள், என் தமிழார்வத்திற்கு வித்திட்டு தமிழை சிறப்பாகக் கற்றுத் தந்த ஆசான்களான சீவை என்று அழைக்கப்பட்ட திரு.சீ.வைத்தியநாதன், திரு.பத்மநாபன், திரு.கோபால் சக்ரவர்த்தி, திரு.ஸ்ரீநிவாசன் ஆகியோரே. அதுவும், திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் செய்யுட்களை ராகத்துடன் (சாரீரம் சற்று ஒத்துழைக்காவிட்டாலும் கூட!) பாடி, பொருள் விளக்கம் தந்ததை மறக்கத் தான் முடியுமா? பள்ளிக்காலங்களில் தமிழ் இலக்கணத்தின் பால் எனக்கு மிகுந்த காதல் இருந்தது எனலாம். SSLC இறுதித் தேர்வில்(1979)தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதற்காக 'கம்பர் கழகம்' பரிசாக வழங்கிய பதக்கத்தை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

1. ஓரு முறை ஆங்கிலப்பாட ஆசிரியர் திரு D.ராமானுஜம், கட்டுரைப் புத்தகம் எடுத்து வராத மாணவர்களை வகுப்பை விட்டு வெளியே செல்லுமாறு பணித்த மறு நிமிடம், அம்மாணவர்களில் நானும் ஒருவன் என்பதைப் பார்த்தவுடன், உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டு அனைவரையும் அமரச் சொன்னதும் (அதனால் சக மாணவர்கள் கடுப்பானதும்!)
2. மற்றொரு முறை, 11-ஆம் வகுப்பு வேதியியல் ஆசிரியர் TRR என்றழைக்கப்பட்ட T.R.ராஜகோபாலன், என்னுடன் பயின்ற அவரது மகனிடம் கேட்ட ஒரு வினாவுக்கு (Avogadro விதி என்ன?) விடை கூற அவனுக்கு உதவ முயன்றதற்காக, அவனை Avogadro விதியை 50 தடவையும், என்னை 100 தடவையும் எழுதுமாறு தண்டனை அளித்ததும், (அதை 'என் விதி' என்று நொந்தபடி, கையொடிய எழுதியதும்!)
3. மற்றொரு முறை, 9-ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் திரு S.K.சேஷனிடம் அரையாண்டுத் தேர்வில் எனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அரை மதிப்பெண்ணை(!) போராடிப் பெற்றதும்,
4. +1 வகுப்பு படிக்கையில், உயிரியல் சோதனைக் கூடத்தில், மிகுந்த மன சங்கடத்துடனும், பாவம் செய்கிறேனோ என்ற அச்சத்துடனும் குளோரோஃவாம் மயக்கத்திலிருந்த என் முதல் தவளையை அறுத்ததும்,
5. 11-ஆம் வகுப்பு கணித ஆசிரியர் திரு M.சுப்ரமணியன், Calculus பாடத்தை மிக அற்புதமாக பயிற்றுவித்ததும்,
6. 8-ஆம் வகுப்பு தமிழய்யா திரு. பத்மநாபன் "துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே!" என்ற நம்மாழ்வரின் பாடல் வரிகளை 'ழ'கரம் வராத மாணவர்களை பல முறை உரைக்கச் சொன்னதும்,


என் நெஞ்சில் என்றும் வாழும் 'பசுமை நிறைந்த நினைவுகளே'!

சின்னக் காஞ்சிபுரத்தில் தெற்கு மாடவீதியில் அமைந்த எங்கள் பரம்பரை வீட்டில் நாங்கள் செலவிட்ட நாட்களை என்னால் மறக்கவே முடியாது! அந்த வீட்டை விற்றே, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஓடி விட்டன. அதன் பிறகு நானும் காஞ்சிபுரம் சென்றதாக ஞாபகமில்லை! வீட்டை வாங்கியவர், அதை இடித்து விட்டு, பல குடியிருப்புகள் கட்டி, வாடகைக்கு விட்டு விட்டார் என்பது யாரோ சொன்ன செய்தி!

பள்ளிக் காலங்களில், வருட விடுமுறையின் பல நாட்களை, அத்தை தனித்து வாழ்ந்த அவ்வீட்டில், நாங்கள் ஆனந்தமாக ஆடி ஓடி விளையாடிக் கழித்ததும்,
காலை வேளையில் அத்தை தரும் பழையதும் (பழைய சோறு!) தொட்டுக் கொள்ள, சட்டியில் காய்ச்சிய பழங்குழம்பும் அமிர்தமாக இனித்ததும்,
அத்தை சினிமா விரும்பி என்பதால், அவர் கூட்டிச் சென்ற பெரிய காஞ்சிபுரக் கொட்டகைகளில் பல பழைய திரைப்படங்களைக் கண்டு களித்ததும் (ஒரு சமயம், புடைபுடைக்கிற மே மாத வெயிலில் ஜட்கா வண்டியில் சென்று ரஜனியின் 'தாய்வீடு' படம் பார்த்தது!),
வரதராஜப் பெருமாள் கோயிலில் இருக்கும் தங்க பல்லியை பார்ப்பதற்காகவே, ஒரு நாளில் பல தடவை கோயிலுக்குச் சென்றதும்,
காஞ்சியில் குளத்தினடியில் வாழ்பவரும், 40 ஆண்டுகளுக்கொரு முறை சிறிது காலம் கோயிலுள் எழுந்தருள்ளி பக்தகோடிகளுக்கு அருள் பாலிப்பவருமான அத்தி வரதப்பெருமானை, கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன், குடும்பத்தோடு (அத்தையும் தான்!) பல மணி நேரம் வரிசையில் நின்று, தரிசனம் செய்ததும்


'நெஞ்சம் மறப்பதில்லை, அது நினைவை இழப்பதில்லை!' வகை ஞாபகங்களே!!!

இக்கட்டுரையை, என் 9-ஆம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் இடம் பெற்ற, நேற்று தான் படித்தது போல் என் ஞாபகத்தில் பளிச்சென்று வீற்றிருக்கும் கம்ப ராமாயணச் செய்யுளுடன், நிறைவு செய்கிறேன்!

சூடையின் மணி என் கண்மணி ஒப்பது, தொன்னாள்
ஆடையின் கண்ணிருந்தது பேரடையாளம்!
நாடி வந்தென தின்னுயிர் நல்கிய நம்பா!
கோடி என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள்..


என்றென்றும் அன்புடன்
பாலா


Friday, October 22, 2004

24-oct விகடனில் 'கற்றதும் பெற்றதும்'

சுஜாதா அவர்களின் 'கற்றதும் பெற்றதும்' தொடர் கட்டுரைகளைப் படிக்கும்போது, அறிவுபூர்வமான மற்றும் சுவையான பல விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது. திரு.சுஜாதாவுக்கு வயதானாலும் கூட, அவர் இளமையாக சிந்திப்பதனால் தான், அவரது எழுத்தில் நகைச்சுவை உணர்வு இன்றும் மிளிர்கிறது! சென்ற வார ஆனந்த விகடனில், அவரது கட்டுரையில், பல இடங்களில் இதைப் பார்க்க முடிகிறது. உதாரணங்களாக, சிலவற்றை எடுத்து தந்திருக்கிறேன்.

1. அவர் சென்றிருந்த அனஸ்தீஸியா பற்றிய விளக்கக் கூட்டத்தில், தனக்கு 'மயக்க மருந்துகளைப் பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் கிடைத்தது' என்கிறார்! கூறி விட்டு, 'எப்படி சிலேடை?' என வினவுகிறார். நான் என்னவோ இத்தனை காலம், " பெருங்காயம், பருகாத-தேன், என்-பேனா, மறுப்போர்" வகைப்பட்ட சொற்கள் மட்டுமே சிலேடை என எண்ணியிருந்தேன்!

2. அடுத்து, லேட்டஸ்ட்டாக வந்திருக்கிற PROPOFOL எடுத்துக் கொள்ளும்போது (அறுவை சிகிச்சையின் போது தான்!) நமக்கு " 'அய்யோ மிய்யோ' இருக்காதாம்" என்கிறார்! 'அய்யோ மிய்யோ' என்றால் என்ன என்பதை திரு.சுஜாதாவிடம் திரு.தேசிகன் கேட்டுக் கூறினால், அவருக்கு புண்ணியமாகப் போகும்!

3. ANAESTHETIST-ஐ 'மயக்குநர்' என்கிறார்! அதாவது, ஒரு ஆபரேஷனுக்கு, மருத்துவரும் தேவை, மயக்குநரும் அவசியம்.

4. தான் சென்றிருந்த ஒரு கிறித்துவக் குடமுழுக்கு விழாவை, "பிதா சுதன் பரிசுத்த ஆவியின் துணை புதிய பிறவிக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று 'ஆஸ்ஸீர்வதிக்கும்' விழா" என்று கூறுகிறார்! Subtle Humour!

5. எளிமையான தமிழ்ச் செய்யுட்களுக்குக் கூட அர்த்தம் புரியாதோரை, 'SMS தமிழர்கள்' என்கிறார்!

6. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் அமைந்தது,

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே!"

என்ற கம்பரின் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு அவர் வழங்கும் 'சென்னைத்தமிழ்' பொழிப்புரையான
"நாமெல்லாம் பொறக்க சொல்ல படச்சு காப்பாத்தி சாவடிக்கிறார் பாரு தல, அவுரு கால்ல உயு வாத்யாரே" என்பது தான்!!!
Deadly Translation Sir!

அவரே ஒரு கட்டுரையில் எழுதியது போல 'இன்னுமொரு நூற்றாண்டிரும்' என்று அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, October 19, 2004

பல்லவியும் சரணமும் - IV

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே!

1. சங்கீதத் தென்றலிலே சதிராடும் பூங்கொடியே, சந்தோஷம் காண ..
2. குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில் ...
3. இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது காலம் செய்து விட்ட மாயமோ?
4. குடந்தையில் பாயும் காவிரி நதி தான் ...
5. மின்னல் உருமாறி மண் மேலே, கன்னியைப் போலே, எந்தன் முன் ...
6. இந்த தேவி மேனி மஞ்சள், நான் தேடியாடும் ஊஞ்சல்!

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்!
மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, October 17, 2004

சிறு வயது சிந்தனைகள் - பகுதி III

ன் சிறுவயதில் நாங்கள் (அம்மா, அக்கா, தம்பி, தாய்வழிப் பாட்டி, தாத்தா) வாழ்ந்தது, திருவல்லிக்கேணியின் பழைய வீடுகளுக்கே உரித்தான அமைப்பு (அகலவாக்கில் சுமார் 14 அடி, நீநீ... நீளவாக்கில் சுமார் 120 அடி!) கொண்ட ஒரு வீட்டில், ஒண்டுக் குடித்தனத்தில் தான். அவ்வீட்டில் எங்களோடு சேர்த்து நான்கு குடும்பங்கள் இருந்தன. அனைவரின் சமையலறைகளும் வீட்டின் தரைப்பகுதியிலும், கூடம் மற்றும் படுக்கை அறைகள் மாடியிலும் அமைந்த ஒரு வித்தியாசமான வீடு அது! உண்பது கீழே! உறங்குவது மேலே (வானொலியில் ஒலிச்சித்திரத்தை கேட்ட பின்னர்)! இரவு வேளைகளில் (9 மணிக்கு மேல்) வீட்டின் கீழ்ப்பகுதியில் பொதுவாக ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்பதால், சமையலறைகளுக்கு அப்பால், வீட்டின் பின்கோடியில் அமைந்த கழிவறைகளுக்கு, மாடியிலிருந்து இறங்கி, இருட்டில் செல்ல சிறியவர்களுக்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது!!! அந்த இக்கட்டான நேரங்களில், துணிவை வரவழைத்துக் கொள்ள ஒரு MGR பாடலையோ அல்லது ஆஞ்சநேயர் ஸ்லோகத்தையோ முணுமுணுத்துக் கொண்டே செல்வது என் பழக்கம்!

அக்கால கட்டத்தில்,எங்களது தூரத்து உறவினர் ஒருவர் என் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்து வந்தார். தந்தையில்லாக் குழந்தைகள் என்று எங்களிடம் மிகுந்த அன்பு செலுத்தினார். அவரை, 'பஜணா' மாமா என்ற 'காரணப்பெயர்' கொண்டழைப்போம்! மாமா அவரது 6-வது வயதில் திருவல்லிக்கேணி வழியாக நடைப்பயணமாக திருமழிசை சென்று கொண்டிருந்த ஒரு பஜணை கோஷ்டியின் பின்னே, கான மயக்கத்தில் சென்று விட்டாராம்! பின்னர், ஒரு பெரிய தேடலுக்குப் பின் மீட்கப்பட்டு, வீடு வந்து சேர்ந்தாராம்! (இதெல்லாம் மாமாவின் தாயார் கூறியது)

அவர் எங்களுக்கு படிப்பு சொல்லித் தருவார். எங்களை திரைப்படம், சர்க்க்ஸ் (ஜெமினி!), மெரீனா கடற்கரை, தீவுத்திடலில் நடக்கும் பொருட்காட்சிகளுக்கு கூட்டிச் செல்வார். மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை, 'ரத்னா கபே' உணவகத்திலிருந்து, காலை சிற்றுண்டி (இன்றும் இட்லி, வடை, முக்கியமாக சாம்பார் அவ்விடத்தில் மிக பிரசித்தம்! சிலர் சாம்பாரை குடிக்கவே செய்வார்கள்!) என்னை வாங்கி வரச் சொல்லி, எங்களோடு சேர்ந்துண்பார். தந்தையார் உயிரோடு இருந்திருந்தால் கூட, அவர் அளவுக்கு இருந்திருப்பாரா என்று எங்களை சில தருணங்களில் எண்ணிப் பார்க்க வைத்திருக்கிறார்! நான் பள்ளியில் பல பரிசுகளை வென்றபோதும், எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தபோதும், அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

கதை கூறுவதில் அவரிடம் ஒரு அசாத்திய திறமை இருந்தது. குறிப்பாக, பல விக்ரமாதித்தன் மற்றும் மஹாபாரதக் கதைகளை மிக அழகாக விவரிப்பார். அவர் தனது நண்பர்களுடன் பார்த்து ரசித்த ஒரு திரைப்படக்கதையை, அப்படத்தின் திரைக்கதாசிரியரையே மிஞ்சும் வகையில், எங்கள் கவனம் சிறிதும் சிதறா வண்ணம், கிட்டத்தட்ட 2 மணி நேரம் கோர்வையாக எடுத்துரைப்பதில் அவருக்கு நிகர் அவரே! ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர், அவருக்கு என் குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் ஏற்பட்ட சிறு மனத்தாங்கல் காரணமாக, உறவில் விரிசல் ஏற்பட்டு, தற்போது எங்களிடையே அதிக பேச்சு வார்த்தை இல்லாவிட்டாலும் கூட, அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

பிறருக்கு உதவும் மனப்பான்மை என்னிடம் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். செஸ், டிரேட் (Monopoly) மற்றும் சீட்டில் சில ஆட்டங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே. பின்னாளில் செஸ் அறிவை கூர் தீட்டிக் கொண்டு, GCT-யில் படித்த 4 ஆண்டுகளிலும் கல்லூரி சாம்பியனாகத் திகழ்ந்தேன். 'Literature', 'Patience'(Solitaire போன்றது) மற்றும் 'Trump' போன்ற சீட்டாடங்கள் நிறைய ஆடியிருக்கிறோம். அதிலும் 'லிடரேச்சர்' நமது ஞாபக சக்திக்கு வேலை தரும் அருமையான விளையாட்டு. 4 அல்லது 6 பேர் எதிராடலாம்.

இந்த ஆட்டத்தின் நோக்கம், பலரிடம் பிரிந்திருக்கும் ஒரு ஜாதியை சேர்ந்த சீட்டுக்களை ஒருவர் சேகரித்து, SET சேர்க்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு ஜாதியிலும் A K Q J 10 9 - சீட்டுக்கள் ஒரு SET; 2 3 4 5 6 7 8 - சீட்டுக்கள் ஒரு SET! மொத்த சீட்டுக்களை குலுக்கி ஆட்டக்காரர்களுக்கு பகிர்ந்தளத்த பின், எவரிடம் A Spade உள்ளதோ, அவர் ஆட்டத்தைத் தொடங்கி, சக ஆட்டக்காரர் ஒருவரிடம் தனக்கு வேண்டிய சீட்டு உள்ளதா என வினவுவார். இருந்தால் அதைப் பெற்றுக் கொண்டு, சீட்டை இழந்தவரிடமோ அல்லது மற்றொரு ஆட்டக்காரரிடமோ தனக்கு வேண்டிய அடுத்த சீட்டைக் கேட்டு ஆட்டத்தைத் தொடருவார். அவர் கேட்ட சீட்டு இல்லாத பட்சத்தில், கேட்கப்பட்ட நபர், சீட்டை விளித்து வாங்கும் உரிமை பெற்று, ஆட்டத்தைத் தொடருவார். இதில், சுவாரசியமான விஷயம் ஒன்று உண்டு! ஒருவர், மிகவும் போராடி, ஒரு SET-இல் ஒரு சீட்டைத் தவிர மற்றதை கையகப்படுத்தியிருக்கும் நிலையில், அந்த ஒற்றைச் சீட்டுக்கு சொந்தக்காரர், மற்றனைத்தையும், அவரிடமிருந்து விளித்துப் பிடுங்கி, அழகாக SET சேர்த்து விடுவார்!!!

இக்கட்டுரையை, திருவல்லிக்கேணியில் வாலாஜா சாலையில் அமைந்திருந்த பாரகன் (Paragon தற்போது இடிக்கப்பட்டு அங்கே வானளாவிய அடுக்கு மாடிக் கட்டிடம் தோன்றி விட்டது!) தியேட்டரில் நான் பலமுறை கண்டு களித்த 'இராஜ ராஜ சோழன்' திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடும், என் ஞாபகத்தில் இன்றும் சிறகடிக்கும், வசன பாடல் வரிகளோடு நிறைவு செய்கிறேன்.

தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்!
அவள் தென்மதுரைக் கோயிலிலே சங்கம் வளர்த்தாள்!
தஞ்சையிலே குடி புகுந்து மங்கலம் தந்தாள்! அவள்,
தரணியெலாம் புகழ் பரப்பும் தாயென வந்தாள்,தமிழ்த் தாயென வந்தாள்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, October 15, 2004

நமது டெஸ்ட் கிரிக்கெட் அணி - ஒரு கண்ணோட்டம்

நமது கிரிக்கெட் அணியின் (சச்சின் இல்லாத) நிலமை, அதுவும் ஆஸ்திரேலியா உடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தோல்வி அடைந்த நிலையில், மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. இதற்கு முன்னால் நடந்த ஆசியக் கோப்பை, Videocon Cup, Natwest Challenge மற்றும் ICC champions Trophy தொடர்களிலும், நமது வெற்றி சதவிகிதமும் குறைவே, அதாவது 39%.

அப்படியிருந்தும், அதே அணியே திரும்ப திரும்ப களமிறங்கி, தோற்று நம்மை வெறுப்பேற்றுவது வாடிக்கையாகி விட்டது! அணி வீரர்களுக்கென்ன, தோற்றாலும் ஜெயித்தாலும், அதிகமாகவே 'துட்டு' கிடைத்து விடுகிறது! ரசிகர்களாகிய நாம் தான், நேரத்தையும், பணத்தையும், சக்தியையும் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்! நாம் அவர்கள் மீதுள்ள நம்பிக்கையை என்றும் இழப்பதே இல்லை!!!
இப்போது கூட பாருங்கள், நேற்று கும்ப்ளே 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியதால், இன்று சேவாக் 150+ ரன்கள் குவித்ததால், நமது வெற்றிக் கனவு இன்று துளிர்த்து நாளை விருட்சமாகி விடும் !!! நாம் திருந்துவது கடினமே. இந்த ஆட்டத்தில் நாம் வென்றாலும், அதற்கு கும்ப்ளேவும் சேவாக்-கும் மட்டுமே காரணமாக இருக்க முடியும். TEAM EFFORT என்று கூற இயலாது. தற்போதுள்ள அணியில் மாற்றங்கள் அவசியம் எனத் தோன்றுகிறது.

முக்கியமாக, சமீபத்து தொடர் தோல்விகளுக்கு, கங்குலி பொறுப்பேற்று, captain பதவியிலிருந்து விலகுவது தான் அவருக்கு அழகு. அணியில் உள்ள சில ஆட்டகாரர்களிடத்தில் கங்குலிக்கு இருக்கும் நம்பிக்கையும் விசுவாசமும், வரைமுறை தாண்டி போய் விட்டது. லஷ்மண் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் அடித்த 281-க்கு பிறகு உருப்படியாக எதுவும் செய்ததாக நினைவில்லை!

கங்குலிக்கு பிடித்த யுவரஜிடம் எவ்வளவு திறமை உள்ளதோ, அதை விட ஆணவம் அதிகம். யுவராஜ் தன்னை மட்டை அடிப்பதில் விவியன் ரிச்சர்ட்ஸ் என்றும், பந்து தடுப்பதில் ஜான்டி ரோட்ஸ் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்!? நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸிலும், நமது அணி இருந்த நெருக்கடியான நிலமையை சற்றும் உணராமல், ஒரே
மாதிரியான இரு மோசமான ஷாட்டுகளுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

யுவராஜை துவக்க ஆட்டக்காரர் ஆக்கியே தீருவேன் என்று அடம் பிடித்த கங்குலியின் அடாவடித்தனம் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் சோப்ராவின் தன்னம்பிக்கை தரை மட்டமானது தான் மிச்சம்! ஆஸ்திரேலிய குதி-வேகக் (bouncy and fast!) களங்களிலேயே அருமையாக ஆடிய அவர், இப்போது பெங்களூரின் தட்டையான
களத்திலேயே சொதப்பினார்.

இதை விட அக்கிரமமான விஷயம் ஒன்று உண்டென்றால், அது, முதல் டெஸ்டில் 2-வது இன்னிங்க்ஸில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஆடி ஆட்டத்தை எப்படியாவது 'டிரா' செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்தபோது, கங்குலி இல்லாத ரன்னுக்கு முட்டாள்தனமாக ஓடி, ரன்அவுட் ஆனது தான்! கங்குலியை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கி விட்டு, திராவிட்டை கேப்டன் ஆக்கினால் தான், நமக்கு விடிவு காலம் பிறக்கும் (சென்னை டெஸ்டில் இந்தியா வென்றாலும் கூட!).

அத்துடன் நில்லாமல், அணிக்கும் சற்று புது ரத்தம் பாய்ச்சுதல் நலம். அதற்கு, யுவராஜ், லஷ்மண், பார்த்திவ் படேல் போன்றோரை சிறிது காலம் அணியிலிருந்து விலக்கி வைக்கலாம். அவர்களுக்கு பதிலாக வரப்போகிறவர்கள் அவர்களை விட மோசமாக விளையாடுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே! அணிக்கு பலம் சேர்க்க மொஹமத் கெய்·வ், தினேஷ் கார்த்திக், ஹேமங்க் பதானி மற்றும் பல இளம் வீரர்கள் தயாராகவே உள்ளனர். நமது ஜாம்பவான் தெண்டுல்கரும் விரைவில் அணியில் சேர்ந்து விட்டால் நல்லது.

Thursday, October 14, 2004

அம்மாவின் 'HARD TALK' --- மற்றொரு கோணத்தில்!

பத்ரி, தனது வலைப்பதிவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்காணல் ('Hard Talk' with Karan Thapar in BBC) பற்றிய தனது 'எண்ணங்களை' சுவாரசியமாக வெளியிட்டிருந்தார்! அதைப் படித்தபோது, சரிந்திருக்கும் தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த, அந்த நேர்காணலை 'அம்மா' சரியாக பயன்படுத்தத் தவறி விட்டாரோ எனத் தோன்றியது.

ஆனாலும், எனக்கென்னவோ நேர்காணலின் தொடக்கத்திலிருந்தே, கரண் தபார் சற்று அதிக 'aggressive' ஆக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றதாகவே தோன்றியது. ஒரு தேர்ந்த அனுபவமிக்க பத்திரிகையாளர், தனது STYLE-ஐ நேர்காணல் செய்யப்படும் நபரை பொறுத்து, மாற்றியமைத்து செயல்பட்டிருக்கலாமோ என்ற எண்ணமும் எழுந்தது. உதாரணத்துக்குச் சில:

1. 'Humiliating Defeat' என்ற சொல்லாக்கத்திற்கு பதிலாக 'Huge Defeat' என்பது, நேற்காணலை சுமுகமாகத் தொடங்க பெரிதும் உதவியிருக்கலாம்.
2. அதே போல், தபாரின் 'You are reading a statement' சற்று அனாவசியமாகவே தோன்றியது. படிக்க வந்ததை சற்று படிக்க விட்டு, பின்னர் குறுக்கிட்டிருக்கலாம்! இவ்வளவு அவசரம் காட்டியிருக்கத் தேவையில்லை!
3. அடுத்து, "So was it revenge? It was vengeance?" என்ற தபாரின் கேள்வி மிக அதிகம்!!! எந்த ஒரு அரசியல்வாதியும் இத்தகைய வினாவுக்கு 'ஆமாம்' என கூறப்போவதில்லை! ஆத்திரமூட்டுவதைத் தவிர வேறெந்த நோக்கமும் இத்தகைய கேள்வியில் இல்லை எனலாம்.
4. தபார் தனது ஒவ்வொரு கூற்றையும்/வினாவையும் "The Press says", "The press depict" போன்ற ஒட்டுதலோடு வெளிப்படுத்தியது சரியாகப் படவில்லை. பத்திரிகைத்துறை பாராட்ட வேண்டும் என்பதற்காகவே ஒரு அரசாங்கத்தை நடத்த இயலாது! தற்போதுள்ள சூழலில், கட்சி சார்ந்த பத்திரிகையாளர்கள் பலர் உள்ளனர் என்பதே நிஜம்! You are confident that you can reach out to the people above the press and convince them of the real Jayalalitha? என்று தபார் கேட்டதற்கு, பத்திரிகைகளை படித்து விட்டு, அதன்படி மக்கள் ஓட்டு போடுகிறார்கள் என்பதை ஓரு நகைச்சுவையான கருத்தாகத் தான் கொள்ளலாம்!!!
5. அடுத்து தபாரின் "Are you embarrassed by your belief in Numerology and Astrology?" என்ற வினாவும் தேவையற்ற ஒன்று. அவற்றை நம்புவதும் நம்பாததும் ஒருவரின் தனிப்பட்ட உரிமை என விட்டிருக்கலாம். அக்கேள்வியின் தொடர்ச்சியாக, தமிழக மக்கள் அனைவரும் "Numerology" மேல் நம்பிக்கை உள்ளவர்களாக மாறி விடக்கூடிய சாத்தியம் இருப்பது போல் ஒரு வினாவெழுப்பினார்!(As Chief Minister of Tamil Nadu, you set an example ...) Too Much!


அதற்காக தமிழக முதல்வரும், நேர்காணலில் பல கேள்விகளுக்கு சிறப்பாக பதிலுரைத்தார் என்றும் கூற முடியவில்லை :-(( மேற்கூறியவைகளை வைத்து நான் 'அம்மா' அபிமானி என்று முத்திரை குத்தி விடாதீர்கள்! நான் எப்போதும் என் வீட்டம்மாவின் அபிமானி மட்டுமே :-))

என்றென்றும் அன்புடன்
பாலா

பல்லவியும் சரணமும் - III

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில்!!!

1. முதிராத காதல் கனியும் இன்னும் முற்றாத கன்னி நகையும், அத்தான் என்றழைக்கும் அழகும்
2. கலைமாது தான் மீட்டும் இதமான வீணை, கனிவான ஸ்வரம் பாட பதமானது!
3. தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் அது சிலை தான்!
4. காதல் ஒரு கீதம், அதைக் கண்டேன் ஓரிடம், போனாள் அவள் போனாள் நான் பார்த்தேன் நூறிடம்!
5. தேனோடு பால் தரும் செவ்விளநீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும்!
6. குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே!
7. அது அல்லவோ பருகாத தேன், அதை இன்னும் நீ பருகாததேன்?
8. இளங்காற்று தீண்டாத மலரில்லையே, கிளி வந்து கொத்தாத கனியில்லையே!
9. தேக சுகத்தில் கவனம், காற்று வெளியில் பயணம், கங்கை நதிக்கு ...
10. பொன்மலர் கண்களில் அஞ்சனம் தீட்டி, பூவையின் அண்ணன் கைவளை பூட்டி! தாய் வழியே வந்த ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்!
மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, October 13, 2004

பல்லவியும் சரணமும் - II

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்!

1. சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
2. வானுலாவும் மஞ்சள் மேகம் மழை சேர்க்குமா? இங்கே உன்னை கண்டேன், நல்ல நேரமே!
3. நாயகன் நினைவே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்,
4. என் மகராணி மலர்மேனி செம்மாங்கனி என மடி மீது குடியேறி முத்தாடவா?
5. பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் அன்று, கால் கொண்டு ஆடும் பிள்ளை
6. கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ?
7. கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட!

என் பழைய நினைவுகளிலிருந்து சிலவற்றை அவசரமாக பிய்த்து பதித்துள்ளேன். சொற்தவறுகள் இருந்தால் மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்

பாலா

Tuesday, October 12, 2004

பல்லவியும் சரணமும்!

சில நல்ல பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியை கண்டு பிடியுங்களேன்! (நாளை நானே சொல்கிறேன்!)

1. தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?
2. முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா?
3. நிறம் பார்த்து வெறுப்போர் முன் படைத்தாய் கண்ணா, நல்ல குணம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா!
4. என் மாடம் முழுதும் விளக்கு! எந்நாளும் இல்லை இருட்டு. என் உள்ளம் போட்ட கணக்கு, ஒரு போதும் இல்லை வழக்கு!
5. பூவுலகின் லட்சியங்கள் பூப்போன்றே வாழும்! தெய்வ சொர்க்க நிச்சயம் தான் திருமணமாய் கூடும்!
6. மெல்லிய பூங்கொடி வளைத்து, மலர் மேனியை கொஞ்சம் அணைத்து, இதழில் தேனைக் குடித்து,
7. கவிஞர் சொன்னதே கொஞ்சம், இனிமேல் காணப் போவதே மஞ்சம்!
8. தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு, பூஞ்சிட்டு, கண்ணல்ல ஓடி வா!
9. கரும்போ, கனியோ, கவிதைச் சுவையோ, விருந்தோர் கொடுத்தான், விழுந்தாள் மடியில்!
10. தண்ணீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள், பனி மேடை போடும் பால் வண்ண மேனி!

என் பழைய நினைவுகளிலிருந்து சிலவற்றை அவசரமாக பிய்த்து பதித்துள்ளேன். சொற்தவறுகள் இருந்தால் மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, October 04, 2004

உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!

நலம், நலமறிய அவா.

சென்ற வருடம், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின் நாம் படித்த GCT கல்லூரிக்கு பணி புரியும் நிறுவனத்திற்கு இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுக்கும் நிமித்தம் (Campus Recruitment) செல்ல நேர்ந்தது. கல்லூரி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதே ஒரு சுகானுபவமாகத் தோன்றியது!

கல்லூரி வளாகத்திற்குள் அமைந்திருக்கும் கூடைப்பந்தாட்டக் களம், கான்டீன், விளையாட்டரங்கம், Table Tennis ஆடிய, TV கண்டு களித்த Gymkana, உணவகங்கள் (mess), பாடம் பயின்ற வகுப்பறைகள், திரையரங்கம், வைகை, பவானி, காவேரி என்றழைக்கப்பட்ட தங்கும் விடுதிகள் ஆகியவற்றை மறுபடியும் தரிசித்தபோது, நாம் கல்லூரியில் பயின்ற கால கட்டத்தில் சந்தித்த பலவிதமான நிகழ்வுகள் குறித்த ஞாபகங்களும், உணர்வுகளும், பெரு வெள்ளம் போல் என் நெஞ்சில் மோதியது.

நாம் முதலாண்டின் போது தங்கியிருந்த விடுதி, தற்போது சிறைச்சாலைப் போல, முற்றும் இரும்பு வேலியால் (Ragging நடைபெறா வண்ணம்) சூழப்பட்டுள்ளது! அதற்கென தனியாக 24-மணி நேரக்காவலரும் நியமிக்கப் பட்டுள்ளனர். பொதுவாக, முதலாண்டு மாணவர்களைத் தவிர வேறு யாரும் அவ்விடுதியில் நுழைய அனுமதிக்காத காவலர், நான் பல வருடங்களுக்கு முன் அவ்விடுதியில் தங்கிப் படித்தவனென்பதையும், வந்த காரணத்தையும் கூறியவுடன், அவர், "உங்களுக்கில்லாத அனுமதியா? உரிமையா?" என்று நட்புடன் கூறி, உள்ளே செல்ல அனுமதித்தார்! நானும் 'சக அறையர்' பழநியும் வாழ்ந்த 116-இலக்க அறை, ஒரு பக்கம் சற்று உடைந்த கண்ணாடியுடன் கூடிய ஜன்னலுடனும், பழுப்பு வண்ணக் கதவுகளுடனும், அதே வாசனையுடனும் அப்போதிருந்த மாதிரியே தோன்றியது!!

நாம் ECE பயின்ற காலத்தில் இளம் விரிவுரையாளராக இருந்த 'LP Madam' இப்போது ECE துறைக்கு தலைவராக (தலைவியாக!) உள்ளார். அண்ணாதுரை அவர்கள் கணினி அறிவியல் துறைத் தலைவராக உயர்ந்துள்ளார். நம் கல்லூரி அலுவலகக் கட்டிடத்தின் முகப்பிடத்தில், அப்போதைய கல்லூரி முதல்வர் திரு.சாமுவேல் மற்றும் துணை முதல்வர் திரு.WGK அவர்களின் புகைப்படங்கள் புதிதாகத் தோன்றியிருந்தன. நாம் அடிக்கடி செல்லும் கல்லூரிக்கு அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்றபோது ஓர் ஆச்சரியம்! நாம் அன்று பார்த்த அதே அர்ச்சகர் இன்றும் இறை சேவை செய்து வருகிறார். அந்த பிள்ளையார் Semester தேர்வுகளில் போது நமக்கு எவ்வளவு உதவியிருக்கிறார் என்பதை நீ நன்றாக அறிவாய்!!!

முன்பிருந்தது போலவே, நமது கல்லூரியில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை இன்றும் அதிகமாகவே உள்ளது! நான் சந்தித்த மாணவப் பிரதிநிதிகள், மிக அடக்கமாகவும், எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த மிக உதவியாகவும் இருந்தார்கள். அவர்களிடம் நானும் ஒரு GCTian என்று கூறியபோது, நாம் படித்த காலத்தைப் பற்றிய பலவித வினாக்களை எழுப்பி, பதில் வேண்டி என்னை திணறடித்து விட்டார்கள்!
அந்த ஒரு நாள் கல்லூரி விஜயத்தின் போது, என்னுள் ஒர் இன்பப் பிரவாகமாய் பொங்கியெழுந்த, நிகழ்வுகளின் நினைவுகளான,


1. ஏதோ ஒரு முக்கியமான கிரிக்கெட் ஆட்டத்தில், நமது ஷியாம் அனாயசமாக விளையாடி 100 ரன்களைக் குவித்தபோது, அவனுக்கு மாலையிட்டு நாம் அனைவரும் அவனை தோள் மீது சுமந்ததும்
2. நம்முடன் படித்த பாலாஜிக்கும் (குள்ளிபீஸ்!) மாதப்பாவுக்குமிடையே, ஓரு அழகிய மாலை வேளையில் செயற்கை ஓளியில் நடைபெற்ற ஓர் அற்புதமான பூப்பந்தாட்ட இறுதி ஆட்டமும்
3. காலஞ்சென்ற நம்முயிர் சிநேகிதன் ப்ரீதம், Mock Press என்றழைக்கப்படும் நிகழ்ச்சியில், சாத்தானாக தோன்றி நடித்து, வெளுத்துக் கட்டியதும்
4. AD-APT போட்டிகளில் வெளிப்பட்ட, 'நாரி' என்று அன்போடு அழைக்கப்பட்ட TS நாராயணனின் அபாரமான பேச்சுத்திறனும்
5. பல நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களில் சோர்வை காட்டாமல் ஓடி வென்ற நமது முருகதாஸிடம் இருந்த இறுதிச்சுற்று (Final Lap) நிபுணத்துவமும்
6. நமது நந்துவின் Table Tennis சாதனைகளும்
7. GRE, CAT, GATE என்று அனைத்துத் தேர்வுகளுக்கும், ஒரே சமயத்தில் படித்து, எல்லாவற்றிலும் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்ற தோழன் வசந்த்தின் அயராத உழைப்பும், சிறந்த கல்வியார்வமும்
8. கூடைப்பந்தாட்டக் களத்திலுள்ள இருக்கைகளில் அமர்ந்தபடி, அவ்வழியாகச் செல்லும் மாணவிகளை கண்களாலேயே விழுங்கிய 'ஜொள்' செந்தில் மற்றும் 'படூ' செல்வராஜின் இளமைக் குறும்புகளும்
9. GS-இன் தாங்க முடியாத 'கடி' ஜோக்குகளும்
10. கல்லூரி விழாக்களில் பல முறை ஒலித்த அசோக்கின் மயக்கும் குரல் வளமும்
11. கல்லூரியின் அழகு தேவதை ஆஷா ஜார்ஜ் பங்கு பெற்ற நீளம் தாண்டும் போட்டியும்
12. கல்லூரித் திரையரங்கில், ஓர் இரவுக்காட்சியின் நடுவே, படத்துக்கு சம்மந்தமில்லாத, 'தணிக்கை செய்யப்படாத' சில காட்சிகளைப் புகுத்திய குமரவேலின் அசாத்திய துணிச்சலும்
13. மூன்றாமாண்டு படித்தபோதே, இறுதியாண்டு மாணவரை பிரமிக்கத்தக்க வகையில் வென்று, Overall Sports Shield-ஐ கைப்பற்றியதும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த இரவு நேரக் களியாட்டங்களும்
14. 'தலைவர்' என்று மரியாதையோடு (வேலையை விட்டு மறுபடி படிக்க வந்ததால்!) அழைக்கப்பட்ட சேகர், ஆரோக்கியம் வேண்டி, தினம் மாலையில், மைதானத்தைச் சுற்றி, வியர்க்க விறுவிறுக்க ஓடிய காட்சியும்
15. முதலாம் ஆண்டு படிக்கையில், மாலை/இரவு வேளைகளில் நமது அறைகளில் விளக்கெரிய 'தடா' போட்ட senior மாணவர்கள், விளக்கெரிவதைப் பார்த்து விட்டால், அமர்க்களமாகக் கல்லெறிந்து ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, நம்மை கதி கலக்கியதும்

என் நெஞ்சை விட்டு என்றும் அகலா!!!

உன் உயிர்த் தோழன்
பாலா


Friday, October 01, 2004

கமல்ஹாசனின் சிங்கப்பூர் பேச்சு குறித்த ஓர் அலசல்


சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த "அனைத்துலக அரங்கில் தமிழ்" என்ற மாநாட்டில் திருவாளர் கமல்ஹாசன், தன் பங்குக்கு தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களை கடுமையாக சாடியுள்ளார். அதாவது, தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழ்ப்பற்று அற்றவர்கள், ஆங்கில மோகத்தில் சீரழிபவர்கள் என்றெல்லாம்!

நல்ல திரைப்படங்கள் வாயிலாக கமல் ஓரளவு தமிழ்ச்சேவை செய்துள்ளார் என்றாலும் கூட, இவ்வாறு தாறுமாறாக தமிழ்நாட்டுத் தமிழர்களை கேவலமாகப் பேச தானாக உரிமை எடுத்துக் கொள்வதற்கு, அவர் ஓன்றும் பெரும் தமிழ்த் தொண்டாற்றிய மூதறிஞர் அல்லர்! என்னவோ சிங்கப்பூரில் வாழும் "இனிய" (கமல் கண்ணோட்டத்தில்!) தமிழர்கள் மத்தியில் வள்ளுவப் பெருந்தகையும், நக்கீரரும் உலவுவது போலவும், தமிழ்நாட்டில் என்னவோ "கசப்பான" ஆங்கிலேய ஆட்சி நடப்பது போலவும் பேசியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ்ப்பற்று மிக்க "இனிய" சிங்கப்பூரிலேயே தங்கிக் கொண்டு தமிழ்ப்படம் தயாரித்து வெளியிட்டு, அவர் மகிழ்ச்சியுடன் இருக்கட்டுமே!! யார் தடுத்தது?

உலகநாயகனின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியிலும், அன்னார் சிகரங்களைத் தொட துணையாக நின்றதிலும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு சிங்கப்பூர் மற்றும் பிற இடங்களில் வாழும் தமிழர்களின் பங்களிப்பை விட அதிகம் என்பதை யாரும் மறுக்க இயலாது. கமல் அவர்களின் கணிப்பில் ஆங்கில மோகம் கொண்ட நாங்கள் தானே அவர் நடித்த படங்களை பல முறை (திரையரங்குகளில் தான்!) பார்த்து ரசிக்கிறோம். ஓன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. தமிழ்நாட்டுத் தமிழன் சோற்றாலடித்த பிண்டம், அவனை யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படியே, கமலுக்கு உண்மையான ஆதங்கம் இருந்தாலும் கூட, அதை இங்கு கூறுவதை விடுத்து வெளிநாடு சென்று சேற்றை வாரியிறைப்பது அழகல்ல.

நம் தமிழ் Bloggers-இல் பலர் Professionals-ஆக இருப்பதால், பணி நிமித்தம் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தாலும் கூட, வலைப்பதிவுகள் வாயிலாக உலகளாவிய வலையில் தமிழ் மொழியையும், தமிழார்வத்தையும் வளர்த்து வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று.

அதே மாநாட்டில் நடந்த, கமல் பதில் அளித்த கேள்வியரங்கத்தில் ஒரு தமிழ்நாட்டுத் தமிழர் (வேலை நிமித்தம் சிங்கப்பூர் சென்றவர்) கமலிடம் அவர் ஏன் அவ்வாறு தங்களை இழித்துப் பேசினார் என வினவியதற்கு கமல் அவர்கள் " பின்னே என்ன, தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழை நேசிக்கிறார்கள், தமிழ் மொழியை காப்பாற்றுகிறார்கள், ஆங்கிலத்தை மதிப்பதில்லை என்றெல்லாம் பொய் சொல்லச் சொல்கிறீர்களா?" என்று பதில் வினாவெழுப்பினார். " ஐயா! நீங்கள் உண்மையும் கூற வேண்டாம். பொய்யும் பேச வேண்டாம்! உங்களைப் பற்றியும், தமிழ் சினிமாவைப் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் நிறைய பேசுங்கள்! எங்களை பழிக்காதீர்" என்று கூற விரும்புகிறேன்.

கமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டுத் தமிழர்களின் மீதும் குற்றம் சாட்டுவதை விடுத்து அவர் சார்ந்த திரைப்படத் துறையாலும், அவர் அடிக்கடி தோன்றும் சின்னத்திரையாலும் தமிழுக்கு ஏற்படும் சீரழிவையும், பின்னடைவையும் பற்றி (மட்டும்) பேசியிருந்தால் அது நியாயமும் நேர்மையும் கூடிய பேச்சாக அமைந்திருக்கும்.

வெகு காலமாகவே, தமிழ்த் திரையுலகில், நடிகைகள் தமிழ் பேசத் தெரியாமல் இருப்பது, ஒரு முக்கியத் தகுதியாகவே கருதப்படுகிறது!?!?
"ஓடிப்போயி கல்யாணந் தான் கட்டிக்கலாமா?", "கட்டே, கட்டே, நீ நாட்டுக்கட்டே!", "மலே, மலே, மருதமலே!" போன்ற சமூக நோக்குடைய தமிழ் பாடல்களும், இட்லியில் பீர் (Beer) ஊற்றி சாப்பிடும் (சாமி!) புதுமையும், தமிழறியா வடநாட்டு இறக்குமதி நடிகைகளும், தமிழ்த் திரையுலகம் நமக்கு வழங்கிய கொடை அல்லவா!?!?!

தன்னைத் தானே தமிழ் மொழிக் காவலராக சிங்கப்பூரில் அறிவித்துக் கொண்டதின்(!) அடுத்த கட்டமாக, கமல் அவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்காக என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்பதை அவரது "வசூல் இல்லா" ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails